Published : 16 Dec 2017 07:29 PM
Last Updated : 16 Dec 2017 07:29 PM

தொடர்ந்து தலைமறைவு: அன்புச்செழியன் வழக்கு மத்திய குற்றப்பிரிவு போலீஸாருக்கு மாற்றம்

அன்புச்செழியனை பிடிக்கும் முயற்சியில் போலீஸார் தொடர்ந்து முயற்சித்தும் பலன் கிடைக்காததால், அன்புச்செழியன் வழக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணைக்கு மாற்றி காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.

நடிகரும் இயக்குனருமான சசிகுமாரின் உறவினரும், அவரது நிறுவனத்தின் இணைத்தயாரிப்பாளருமான அசோக்குமார் நவம்பர் 21-ம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக நடிகர் சசிக்குமார் வளசரவாக்கம் போலீஸில் புகார் அளித்தார்.

அவரது புகாரின் பேரில் அசோக்குமாரை தற்கொலைக்கு தூண்டியதாக அன்புசெழியன் மீது வளசரவாக்கம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்தனர்.

போலீஸாரின் கைதுக்கு அஞ்சி அன்புச்செழியன் தலைமறைவாகி விட்டார். அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு போலீஸார் தேடி வருகின்றனர். அவர் பதுங்கி இருப்பதாக சந்தேகப்பட்ட தென் மாவட்டங்கள், பெங்களூர், ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களுக்கு தனிப்படை போலீஸார் சென்று வந்தும் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அன்புச்செழியன் தாக்கல் செய்திருந்த மனுவில், சினிமா துறையில் 30 வருடங்களாக நற்பெயருடன் இருக்கும் தான், வட்டிக்கு வட்டி வசூலிப்பதில்லை என்றும், அசோக்குமார் மரணத்துக்கு தான் காரணமில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.

'தாரை தப்பட்டை' படத்துக்காக வாங்கிய கடனை அடைப்பதிலிருந்து தப்பிப்பதற்காகவே இந்த குற்றச்சாட்டை சசிகுமார் தன் மீது சுமத்தியுள்ளதாகவும், அசோக்குமாரின் தற்கொலை கடிதம் இயற்கையானதாக தெரியவில்லை என்றும், சினிமாத்தனமாக இருப்பதாகவும் அன்புச்செழியன் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

வழக்கு விசாரணைக்கு வந்தால் முன் ஜாமீன் மனு தள்ளுபடியாகும் நிலை இருந்தது. இந்நிலையில் அன்புச்செழியன் முன்ஜாமீன் மனுவை திரும்பப் பெற்றார். இதனிடையே அன்புச்செழியன் நீதிமன்றத்தில் சரணடைவார் என்று கூறப்பட்டது. அன்[புச்செழியனை பிடிக்கும் முயற்சியில் அவரது அலுவலக நிர்வாகிகள் சாதிக்பாட்சா, முருகன் குமார் இருவரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தினர். ஆனாலும் அன்புச்செழியன் இருக்கும் இடம் தெரியவில்லை.

இந்நிலையில் போலீஸார் அன்புச்செழியன் மீது தற்கொலைக்கு தூண்டுதல் தவிர கந்துவட்டி தடுப்புச் சட்டத்தின் கீழும் வழக்குபதிவு செய்து தேடி வந்தனர். ஆனாலும் கடந்த 25 நாட்களாக அன்புச்செழியன் தலைமறைவாகவே உள்ளனர். இதையடுத்து வளசரவாக்கம் போலீஸாரிடமிருந்து அன்புச்செழியன் வழக்கை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றி காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.

மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனர் அசோகன் தலைமையிலான போலீஸார் இந்த வழக்கை விசாரிப்பார்கள் என தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x