Published : 06 Dec 2017 11:13 AM
Last Updated : 06 Dec 2017 11:13 AM
புயலில் சிக்கி, பின்னர் கேரள கடல் பகுதியில் இந்திய கடற்படையினரால் மீட்கப்பட்ட குமரி, நாகப்பட்டினம் மற்றும் அஸ்ஸாமைச் சேர்ந்த 21 மீனவர்கள் நேற்று ஊர் திரும்பினர்.
ஒக்கி புயலின்போது கடலில் காணாமல் போன மீனவர்களை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. கன்னியாகுமரி மாவட்டம் பூத்துறையைச் சேர்ந்த 10 மீனவர்கள், தூத்தூர், களியக்காவிளையைச் சேர்ந்த தலா ஒருவர், நீரோடியைச் சேர்ந்த இருவர், நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த 4 பேர் மற்றும் அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த 3 பேர் என மொத்தம் 21 மீனவர்கள், கேரள மாநிலம், ஆலப்புழா பகுதியில், கடலோர காவல் படையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
ஆலப்புழா மருத்துவமனையில் சிகிச்சைக்குப் பின்னர், அவர்கள் நாகர்கோவிலுக்கு அழைத்து வரப்பட்டனர். மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் சவானை அவர்கள் சந்தித்து, நன்றி தெரிவித்தனர். பின்னர், அவர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மீட்கப்பட்ட மீனவர்கள் கூறியதாவது: தேங்காய்பட்டிணம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து அந்தோணி பிச்சை என்பவரது விசைப்படகில் 10 மீனவர்கள் கடந்த 28-ம் தேதி கடலுக்கு சென்றோம். 29-ம் தேதி நள்ளிரவில் கேரள கடல் பகுதியில் சூறைக்காற்றில் சிக்கி படகு சேதமடைந்தது. அந்த வழியாக வந்த குமரி மாவட்டம் பூத்துறையைச் சேர்ந்த மீனவர்களின் படகில், எங்களது படகை கட்டி இழுத்து வந்தோம். வழியில் இன்னொரு படகு மூழ்கும் நிலையில் இருந்தது. அதில் இருந்த 2 மீனவர்களை மீட்டு படகில் ஏற்றினோம்.
அப்போது, எங்களை மீட்டுச் சென்ற படகும் புயல் காற்றால் சேதமடைந்தது. மொத்தம் 21 பேரும் கரைத்திரும்ப முடியாமல் 2 நாட்களாக கடலில் பரிதவித்தோம். உயிர் பிழைப்போம் என்று நம்பிக்கை இழந்த நிலையில், கடலோர காவல் படையினரால் மீட்கப்பட்டோம் என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT