Last Updated : 05 Dec, 2017 07:47 PM

 

Published : 05 Dec 2017 07:47 PM
Last Updated : 05 Dec 2017 07:47 PM

புதுச்சேரியில் அரசுப் பள்ளி கட்டிடம் இடிக்கும் போது விபத்தில் ஊழியர் பலி; 3 பேர் காயம்

புதுச்சேரி அருகே அரசுப் பள்ளி கட்டிடம் இடிக்கும் போது ஏற்பட்ட விபத்தில் பள்ளி ஊழியர்கள் 4 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் ஊழியர் அய்யனார் உயிரிழந்தார்.

புதுச்சேரி அருகேயுள்ள தொண்டமாநத்தம் அன்சாரி துரைசாமி அரசு மேனிலைப்பள்ளி உள்ளது. இங்கு பள்ளி கட்டிடங்கள் இரு பிரிவுகளாக உள்ளன. 37 ஆண்டுகள் பழமையான இக்கட்டிடம் மோசமாக இருந்ததால் பழைய பிரிவை இடிக்கும் பணி கடந்த 3-ம் தேதி தொடங்கியது.

இந்நிலையில் இப்பணி இன்று நடந்து கொண்டிருக்கும் போது மேல்தளத்தில் இருந்த சின்டெக் வாட்டர் டேங்க் எடுக்கப்பட்டுவிட்டதா என்பதைப் பார்வையிட பள்ளி கண்காணிப்பாளர் சிவபாரதி, ஊழியர்கள் மதிவாணன், அய்யனார், ராமன் ஆகிய நால்வரும் மாலையில் சென்று பார்த்தனர்.

அப்போது எதிர்பாராத விதமாக கட்டிடம் சரிந்து, 4 பேரும் விழுந்து காயமடைந்தனர். அவர்கள் காப்பாற்றப்பட்டு உடனடியாக ஜிப்மருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிலையில் காயமடைந்த அய்யனார் உயிரிழந்தார். இதர மூவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வில்லியனூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் இப்பள்ளிக்கு நாளை (புதன்கிழமை) விடுமுறை விடப்பட்டுள்ளது.

பள்ளித் தரப்பில் விசாரித்தபோது, "பள்ளியில் இடிக்கும் பணி நடந்து வந்ததால் இன்று முன்னதாகவே பள்ளி விடப்பட்டது. மாணவர்கள் சென்ற பிறகே இச்சம்பவம் நடந்தது" என்று குறிப்பிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x