Published : 05 Dec 2017 10:00 AM
Last Updated : 05 Dec 2017 10:00 AM

குமரி கடற்கரை கிராமங்களில் தொடரும் சோகம்; 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்னும் கரை திரும்பவில்லை: கண்ணெதிரே பலியான மீனவர் உடலை போராடி கரை சேர்த்ததாக உருக்கம்

குமரி மாவட்டத்தை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள கரை திரும்பவில்லை எனவும், அவர்களை மீ்ட்க நடவடிக்கை எடுக்குமாறும், சேதத்தை பார்வையிட வந்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், மீனவர் பிரதிநிதிகள் மனு அளித்தனர்.

புயலின்போது கடலில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டிருந்த மீனவர்கள் பல்வேறு மாநிலங்களிலும், லட்சத்தீவின் ஆளில்லா தீவுகளிலும் இருப்பது தெரியவந்துள்ளது.

எனினும், மீனவர்களைப் பற்றிய உறுதியான தகவல் கிடைக்காமல், அவர்களின் குடும்பங்கள் தொடர்ந்து சோகத்தில் மூழ்கியுள்ளன.

மற்ற மீனவர்களும் கடலுக்கு செல்லவில்லை. மீன்பிடி தளத்தில் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

குமரி மாவட்டம் தூத்தூரை சேர்ந்த லிபின் என்பவரது விசைப்படகில், ராமன்துறையைச் சேர்ந்த ஜெர்மியாஸ், எட்வின் பிரிட்டோ, லூர்துதாஸ், நிக்சன், குளச்சலை சேர்ந்த ஜான்ரோஸ், தேங்காய்பட்டிணத்தை சேர்ந்த ஆண்டனி பிரபு, கொல்கத்தாவை சேர்ந்த லூர்தாஸ், முள்ளூர்துறையை சேர்ந்த ராபின் ஆகிய 9 மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றிருந்தனர்.

8 பேர் கரை திரும்பினர்

புயல் சீற்றத்தில் சிக்கி படகு தள்ளாடியதால் நிலைதடுமாறிய ஜெர்மியாஸ் கடலுக்குள் விழுந்து, தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். மற்றவர்கள் நீண்ட நேரமாக உயிருக்கு போராடிய நிலையில், அந்த வழியாக மற்றொரு படகின் உதவியால் மீட்கப்பட்டு நேற்று கரை திரும்பினர். குளச்சல் அரசு மருத்துவமனையில் அவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

8 மணி நேரம் போராடினோம்

உயிர் தப்பியது குறித்து அவர்கள் கூறும்போது, ‘‘நாங்கள் சென்ற படகு 30 கடல் மைல் தொலைவில் ஆழ்கடலில் சிக்கி தள்ளாடியது. ஜெர்மியாஸ் கடலில் தவறி விழுந்தார். காப்பாற்றுவதற்குள் அவர் கடலில் மூழ்கி இறந்தார். 8 மணி நேரத்துக்கும் மேலாக நாங்கள் கடலில் போராடினோம். ஒரு வழியாக மீட்கப்பட்டோம். ஜெர்மியாஸின் உடலையும் மீட்டுக் கொண்டு வந்தோம்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x