Published : 29 Nov 2017 10:01 PM
Last Updated : 29 Nov 2017 10:01 PM

பாரிமுனையில் நீதிமன்றத்தில் ஆஜராக வந்த ரவுடி வெட்டிக்கொலை: 6 பேர் கும்பலுக்கு போலீஸார் வலைவீச்சு

 வழக்கு ஒன்றிற்காக நீதிமன்றத்தில் ஆஜராவதற்காக வந்த ரவுடி உணவு இடைவேளை என்பதால் சாப்பிடச் சென்றபோது 6 பேர் கும்பல் நட்டநடுச்சாலையில் வெட்டிக் கொலை செய்தது.

வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் விஜி என்ற விஜயகுமார்(28). இவர் மீது காசிமேடு மீன்பிடி துறைமுகம் காவல் நிலையத்தில் கொலை முயற்சி உள்ளிட்ட 8-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற ஒரு குற்ற சம்பவத்தில் குற்றவாளியான விஜி வழக்கு விசாரணைக்காக ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் பிடியாணையை ரத்து செய்வதற்காக நேரில் ஆஜராக வந்தார்.

உணவு நேரமானதால் மதியத்திற்கு மேல்தான் வழக்கு விசாரணை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டதால் நீதிமன்றம் அருகே உள்ள பவளக்காரன் தெருவில் மதிய உணவு சாப்பிட விஜி நடந்து சென்றார். அப்போது அவரை பின் தொடர்ந்த அடையாளம் தெரியாத  இளைஞர்கள் விஜியை துரத்தினர். அவர்களிடமிருந்து தப்பிக்க விஜி போராடியபோது கீழே தவறி விழுந்தார். அப்போது அந்த கும்பல் விஜியை சரமாரியாக வெட்டினர். இதனால் சம்பவ இடத்திலேயே விஜி சரிந்து விழுந்தார்’

அவரை வெட்டிய கும்பல் தப்பி ஓடியது. சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் முத்தையால்பேட்டை போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து உயிருக்கு போராடிய விஜியை சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் விஜி உயிரிழந்தார். தப்பி ஓடிய கொலையாளிகளை போலீஸார் தேடி வருகின்றனர்.

இதனிடையே விஜியை கொலையாளிகள் துரத்தி துரத்தி வெட்டும் காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. அதன் பதிவுகளை போலீஸார் கைப்பற்றி கொலையாளிகள் குறித்து விசாரித்து வருகின்றனர். முன்பகை காரணமாக இந்தக் கொலை நடந்திருக்கலாம் என போலீஸார் கருதுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x