Published : 29 Nov 2017 06:17 PM
Last Updated : 29 Nov 2017 06:17 PM
ஆர்.கே.நகரில் டிடிவி.தினகரன் போட்டியிட உள்ளதாக அதிகாரபூர்வமாக அவரது அணி நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.
ஆர்.கே.நகரில் ஜெயலலிதா மறைவுக்கு பின் கடந்த ஏப்ரல் மாதம் இடைதேர்தல் அறிவிக்கப்பட்டு பிரச்சாரமும் நடந்து வந்தது. ஓபிஎஸ் அணி, ஈபிஎஸ் அணி, திமுக, பாஜக, சிபிஎம், நாம் தமிழர், ஜெ.தீபா என பலமுனை போட்டி இருந்தது.
திமுக சார்பில் மருது கணேஷும், எடப்பாடி அணியில் டிடிவி தினகரனும், ஓபிஎஸ் அணியில் மதுசூதனனும், பாஜக சார்பில் கங்கை அமரனும் போட்டியிட்டனர். ஓபிஎஸ், ஈபிஎஸ் அணியினர் தனித்தனி அணியாக போட்டியிட்டனர். இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டதால் தினகரன் தொப்பி சின்னத்திலும், மதுசூதனன் இரட்டை விளக்கு சின்னத்திலும் நின்றனர்.
பின்னர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த விவகாரத்தில் தேர்தல் ரத்துச்செய்யப்பட்டது. இடைப்பட்ட காலத்தில் தினகரன் ஒதுக்கப்பட்டு ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் இணைந்து இரட்டை இலையையும் பெற்றுவிட்டனர். ஆர்.கே.நகருக்கு இடைத்தேர்தலும் அறிவிக்கப்பட்டு விட்டது.
இதனால் தனித்து விடப்பட்ட தினகரன் தேர்தலில் போட்டியிடுவாரா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் தான் கண்டிப்பாக தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும், தனக்கும் திமுகவுக்கும்தான் போட்டி என்று தெரிவித்திருந்த தினகரன் தொப்பி சின்னத்தில் மீண்டும் போட்டியிடுவேன் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறைக்கு சென்று சசிகலாவை சந்தித்த பின்னர் வேட்பாளரை எங்கள் நிர்வாகிகள் அறிவிப்பார்கள் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று மாலை அடையாறு டிடிவி தினகரன் இல்லம் முன்பு கூடிய டிடிவி அணி நிர்வாகிகள் டிடிவி தினகரன் ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிட உள்ளார் என்று தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT