Published : 27 Nov 2017 02:36 PM
Last Updated : 27 Nov 2017 02:36 PM

ஆர்.கே.நகர் அதிமுக வேட்பாளர் அறிவிப்பு தள்ளிவைப்பு: முடிவு எட்டப்படாத உயர்மட்டக்குழு கூட்டம்

ஆர்.கே.நகரில் அதிமுக வேட்பாளர் யார் என்பது குறித்து முடிவெடுக்காமல் கூட்டம் முடிவடைந்தது. இரண்டு நாள் விருப்ப மனு பெற்ற பிறகே வேட்பாளர் அறிவிப்பு என்று செய்தி தொடர்பாளர் வைகை செல்வன் தெரிவித்துள்ளார்.

ஆர்.கே.நகர் இடை தேர்தல் வரும் டிச.21 அன்று நடக்க உள்ளது. இதற்கான வேட்பாளர் தேர்வை அனைத்து கட்சிகளும் முடிவு செய்து வருகின்றன. திமுக சார்பில் ஏற்கனவே போட்டியிட்ட மருது கணேஷையே வேட்பாளராக நிறுத்தியுள்ளனர். திமுகவுக்கு காங்கிரஸ், முஸ்லீம் லீக், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவு அளித்துள்ளது. சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவை திமுக கேட்டுள்ளது.

தினகரன் தரப்பில் தானே நிற்கப்போவதாக அவர் அறிவித்துள்ளார். சீமான் தனது கட்சி சார்பில் வேட்பாளரை நிறுத்த உள்ளதாக தெரிவித்துள்ளார். பாஜக இதுவரை தன் நிலைபாட்டை அறிவிக்கவில்லை. இந்நிலை அதிமுகவில் வித்தியாசமான ஒரு சூழ்நிலை நிலவுகிறது.

கடந்த முறை இடைதேர்தல் தள்ளி வைப்பதற்கு முன் அதிமுக அணி ஓபிஎஸ் அணி, எடப்பாடி அணி என இரண்டாக பிரிந்திருந்தது. எடப்பாடி அணி சார்பாக டிடிவி தினகரன் போட்டியிட்டார். ஓபிஎஸ் அணி சார்பாக மதுசூதனன் போட்டியிட்டார். ஆனால் தேர்தல் ரத்துச் செய்யப்பட்டப்பிறகு அணிகளில் மாற்றம் ஏற்பட்டது.

தினகரன் ஓரங்கட்டப்பட்டார், ஓபிஎஸ் அணி எடப்பாடி அணியுடன் இணைந்தது. அதே போல் இரட்டை இலை சின்னத்தை பெறுவதிலும் போட்டி ஏற்பட்டது. இறுதியில் ஓபிஎஸ், எடப்பாடி அணிக்கு இரட்டை இலை சின்னம் கிடைத்தது.

இந்நிலையில் மீண்டும் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் அதிமுகவில் ஓபிஎஸ் அணிக்குள்ளேயே யார் வேட்பாளராக போட்டியிடுவது என்ற போட்டி ஏற்பட்டது. கே.பி.முனுசாமி தனக்கு அங்கீகாரம் வேண்டும் என்று கேட்டு வருவதாகவும், ஆர்.கே.நகரில் போட்டியிட்டு வெல்வதன் மூலம் அமைச்சராகும் வாய்ப்பு உள்ளதால் கே.பி.முனுசாமி தனது விருப்பத்தை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தேர்தல் தேதி அறிவித்த உடனே கட்சி தனக்கு வாய்ப்பு கொடுத்தால் மீண்டும் போட்டியிட தயார் என்று மதுசூதனன் தெரிவித்திருந்தார். ஆனால் அவர் போட்டியிடுவதற்கு கட்சியில் அமைச்சர்கள் சிலரே எதிர்ப்புத்தெரிவிப்பதாக அதிமுக வட்டாரத்தில் தகவல் வெளியாகி உள்ளது.

வேட்பாளரை தேர்வு செய்ய ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் இன்று ஆட்சிமன்ற குழுக்கூட்டம் நடந்தது. அதில் மதுசூதனன் மீண்டும் தேர்வு செய்து முடிவெடுத்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் அதிமுகவுக்குள் மதுசூதனனை தேர்வு செய்வதில் உள்ள எதிர்ப்புக் காரணமாக அவர் பெயரை அறிவிக்காமல் விருப்பமனுவை பெற்று பரிசீலித்து முடிவெடுப்பது என்று முடிவு செய்துள்ளனர்.

இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த அதிமுக செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன் அதிமுக வேட்பாளர் தேர்வுக்கு இன்றும் நாளையும் விருப்பமனு பெறப்படும். வரும் 29-ம் தேதி ஆட்சிமன்றக்குழு கூடி விருப்ப மனுக்களை ஆய்வு செய்து வேட்பாளரை அறிவிக்கும் என்று தெரிவித்தார். இதன் மூலம் வேட்பாளர் தேர்வில் முடிவெடுக்க முடியாத நிலை அதிமுகவில் உருவாகியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x