Published : 26 Nov 2017 07:50 PM
Last Updated : 26 Nov 2017 07:50 PM
நாகர் கோவிலில் காலியாக நிறுத்தப்பட்டிருந்த ரயில் பின்னோக்கி சென்று ரயில் நிலைய தபால் நிலையத்தில் மோதியதில் வாகனங்கள் நொறுங்கியது பயணிகள் அலறி அடித்து ஓடினர்.
நாகர் கோவில் ரயில் நிலையத்திலிருந்து எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று சென்னைக்கு இன்று இரவு புறப்பட இருந்தது. நாகர் கோவிலிலிருந்து வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் சென்னைக்கு செல்லும்.
இரவு 7-40 மணிக்கு புறப்பட வேண்டிய எக்ஸ்பிரஸ் ரயில்ஸ்டேஷனில் இடமில்லாததால் சரக்கு ரயில்கள் செல்லும் தண்டவாளத்தில் நிறுத்தி வைத்திருந்தனர். அந்த தண்டவாளத்தின் மறுபக்கம் முடிவடைந்து விடும். அங்கு ரயில்வே தபால் நிலையம் உள்ளது.
ரயில்வே நிலையத்தில் பின்புறம் தண்டவாளம் முடிகிறது. அங்கு ரயில்வே தபால் நிலையம் உள்ளது. இன்று மாலை 4-30 மணி அளவில் ரயிலின் முன்புறம் இஞ்சினை இணைக்கும் வேலை நடந்தது. அப்போது இஞ்சின் பெட்டிகளுடன் வேகமாக மோதியது.
இதில் ரயில் பெட்டி வேகமாக பின்னோக்கி செல்ல ஆரம்பித்து விட்டது. வேகமாக பின்னோக்கி வந்த ரயில் தபால் நிலையத்திற்குள் புகுந்தது. ரயில் பின்புறம் வேகமாக வருவதை பார்த்த ரயில் பயணிகள் அலறினர். வேகமாக சென்ற பெட்டிகள் தபால் நிலையத்தை ஒட்டி அமைந்துள்ள வாகன நிறுத்தத்தை இடித்து நொறுக்கியது. அங்கிருந்த ரயில்வே ஊழியர்களின் இருசக்கர வாகனங்கள் அனைத்தும் அப்பளம் போல் நொறுங்கியது. இதை பார்த்த பயணிகள் அலறி அடித்து ஓடினர்.
அதற்கு மேல் செல்லமுடியாமல் ரயில் பெட்டிகள் நின்று விட்டதால் தபால் ஊழியர்கள் உயிர் பிழைத்தனர். இந்த விபத்தில் உயிரிழப்பு, காயம் எதுவும் இல்லாமல் பயணிகள் தப்பித்தனர். 6 இரு சக்கர வாகனங்கள் முற்றிலும் நொறுங்கியது. இந்த விபத்து குறித்து ரயில்வே பாதுகாப்புபடை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT