Published : 26 Nov 2017 10:26 AM
Last Updated : 26 Nov 2017 10:26 AM

ஹெல்மெட் சோதனையின்போது இளைஞர் மீது தாக்குதல்: லத்தியால் அடித்த சிறப்பு எஸ்.ஐ. பணியிடை நீக்கம்

ஹெல்மெட் சோதனையின்போது, போலீஸார் கொடூரமாகத் தாக்கியதில் இளைஞர் காயம் அடைந்தார். அவரைத் தாக்கிய சிறப்பு எஸ்.ஐ. பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டாறு அருகே கல்லுப்பாலம் பகுதியில் கடந்த 23-ம் தேதி இரவு போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் 2 இளைஞர்கள் ஹெல்மெட் அணியாமல் வந்தனர். அங்கு நின்றிருந்த சிறப்பு எஸ்.ஐ., லத்தியால் அவர்களது தலையில் ஓங்கி அடித்ததில், பின்னால் அமர்ந்திருந்த மருதூர்குறிச்சியைச் சேர்ந்த ராஜேஷ் (24) என்பவரின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. அவரும், மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றவரும் நிலைதடுமாறி கீழே விழுந்தனர்.

அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான இக்காட்சி சமூக வலைதளங்களில் பரவியது. விசாரணையில், லத்தியால் தாக்கியவர் சிறப்பு எஸ்.ஐ. மரிய ஆக்ரோஸ் என்பது தெரியவந்தது. அவரை பணியிடை நீக்கம் செய்து, மாவட்ட எஸ்.பி. துரை நேற்று முன்தினம் இரவு உத்தரவிட்டார்.

இதேபோல, ஆற்றூர் அம்பட்டக்குழிவிளையைச் சேர்ந்த சுவாமிநாதன் (33) என்பவர், குலசேகரத்தில் இருந்து ஆற்றூருக்கு ஹெல்மெட் இல்லாமல் சென்றபோது, வழியில் போலீஸார் நிறுத்தியுள்ளனர். அவர் சிறிது தூரம் தள்ளிச் சென்று நிறுத்தியதால், போலீஸார், அவரை லத்தியால் தாக்கியுள்ளனர். இதில் அவரது கண், தலை பகுதியில் இருந்து ரத்தம் பீறீட்டது. சிகிச்சைக்காக அவர் தக்கலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து குமரி மாவட்ட எஸ்.பி. துரை கூறும்போது, ‘‘திருவட்டாறு சம்பவத்தில் எஸ்.ஐ. சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மற்றொரு சம்பவம் குறித்து விசாரிக்கப்படும். இருசக்கர வாகனங்களில் செல்லும் அனைவரும் ஹெல்மெட் அணிய வேண்டும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x