Published : 25 Nov 2017 06:32 PM
Last Updated : 25 Nov 2017 06:32 PM

ஆண்டுக்கொரு தேர்தலை சந்திக்கும் ஆர்.கே.நகர் தொகுதி

கடந்த 2014 பாராளுமன்ற தேர்தலிலிருந்து ஆண்டுக்கு ஒரு தேர்தலை ஆர்.கே.நகர் தொகுதி சந்தித்து வருகிறது. அது பற்றிய ஒரு விரிவான தகவலை பார்ப்போம்.

தமிழக சட்டமன்ற வரலாற்றில் ஒரு தொகுதி வாக்காளர்கள் 4 ஆண்டுகளில் நான்கு தேர்தலில் விதவிதமான வேட்பாளர்களை பார்த்தார்கள் என்றால் அது ஆர்.கே.நகர் தொகுதியாகத் தான் இருக்கும். 2014-ம் ஆண்டு தொடங்கிய தேர்தல் பிரச்சாரம் இன்று வரை நடந்துக் கொண்டுத்தான் இருக்கிறது.

ஆர்.கே.நகர் தொகுதியில் 2011-ம் ஆண்டு கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து அதிமுக மகத்தான வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. சென்னையில் பெரும்பாலான இடங்களை அதிமுக கூட்டணி கைப்பற்றியது. சென்னையின் கோட்டையாக விளங்கிய ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றிவேல் வென்றார்.

கடந்த 2011 சட்டசபை தேர்தலில் ஜெயலலிதா ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதல்வரானார். சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தால், குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டதால் கடந்த 2014ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி ஜெயலலிதாவின் எம்.எல்.ஏ. மற்றும் முதல்வர் பதவி பறிபோனது.

பெங்களூரு உயர்நீதிமன்றம் 2015, மே 11ஆம் தேதி வழங்கிய தீர்ப்பில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டார். இதையடுத்து ஜெயலலிதா அதே மாதம், 23ஆம் தேதி தமிழக முதல்வராக மீண்டும் பதவியேற்றார். ஜெயலலிதா எம்.எல்.ஏ. ஆக வேண்டும் என்பதற்காக சென்னை, ஆர்.கே.நகர் தொகுதியின் அதிமுக எம்.எல்.ஏ. வெற்றிவேல் 2015, மே மாதம் 17ஆம் தேதி ராஜினாமா செய்தார். அதனால் ஆர்.கே.நகர் தொகுதியில் ஜுன் 27ஆம் தேதியே இடைத்தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

பின்னர், 2016ஆம் ஆண்டு மே மாதம் நடந்த சட்டசபை தேர்தலில் மீண்டும் ஆர்.கே.நகர் தொகுதியில் அதிமுக வேட்பாளராக ஜெயலலிதா போட்டியிட்டார். அந்த தேர்தலிலும் ஜெயலலிதா வெற்றி பெற்று முதல்வரானார். இந்நிலையில், ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி கடந்த ஆண்டு டிச.5ஆம் தேதி உயிரிழந்தார். இதனால் மீண்டும் ஆர்.கே.நகர் தொகுதி இடைதேர்தல் வரும் நிலைக்கு தள்ளப்பட்டது. ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆர்.கே.நகர் தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஆர்.கே.நகர் தொகுதி காலியானதை தொடர்ந்து கடந்த மே மாதம் இறுதிக்குள் அங்கு இடைத்தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால் அதிமுக அணி இரண்டாக பிளவு பட்டதால் எடப்பாடி அணியில் தினகரன் தொப்பிச்சின்னத்தில் ஓரணியிலும், ஓபிஎஸ் அணியில் மதுசூதனன் இரட்டை விளக்கு சின்னத்திலும் நின்றனர். திமுக சார்பில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள மருது கணேஷ் போட்டியிட்டார், தீபாவும் போட்டியிட்டார், தேர்தலில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா அதிக அளவில் இருந்ததாக புகார் எழுந்ததை அடுத்து இடைதேர்தல் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் ஆர்.கே.நகரில் 45 ஆயிரம் போலி வாக்காளர்கள் இருப்பதாக திமுக வழக்கு தொடர்ந்தது. போலி வாக்காளர்களை நீக்காமல் தேர்தல் நடத்தக்கூடாது என வழக்கு தொடரப்பட்டது. பின்னர் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து 45 ஆயிரம் போலி வாக்காளர்களை நீக்கியதாக நீதிமன்றத்தில் அறிவித்ததை அடுத்து டிசம்பர் 31க்குள் தேர்தலை நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் ஆர்.கே நகர் இடைதேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது.

டிச.21 அன்று நடக்கும் தேர்தலில் திமுக சார்பில் பழைய வேட்பாளரே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதிமுகவில் இதுவரை வேட்பாளரை அறிவிக்கவில்லை. பாஜக போட்டியிடுவதா வேண்டாமா என்ற குழப்பத்தில் உள்ளது. தேமுதிக ஏற்கனவே போட்டியிடவில்லை என்று அறிவித்து விட்டது. தினகரன் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.

கடந்த 2014 பாராளுமன்ற தேர்தல், 2015-ல் ஜெயலலிதா நிற்பதற்காக இடைதேர்தல், 2016-ல் சட்டப்பேரவை தேர்தல், 2017-ல் இடைதேர்தல் அது ரத்துசெய்யப்பட்ட நிலையில், தற்போது 2017 டிச-21 இடைதேர்தல் என குறுகிய காலத்தில் அதிக அளவில், ஆண்டுக்கொரு தேர்தலை சந்தித்த மக்கள் ஆர்.கே நகர் தொகுதி வாக்காளர்களாக மட்டும் தான் இருப்பார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x