Published : 25 Nov 2017 09:20 AM
Last Updated : 25 Nov 2017 09:20 AM
துபாயில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 15 தமிழக மீனவர்களை எல்லை தாண்டியதாக குற்றம் சாட்டி ஈரான் கடற்படை கைது செய்ததாகவும், சரியான உணவின்றி அவர்கள் பரிதவிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த வினிஸ்டன், சிலுவை, சகாய சார்லஸ், அஜய் ஏஞ்சல், ஆல்பிரட், நியூட்டன், ஜூடு ஹெர்பன், ஜான் பிரகாஷ், திருநெல்வேலி மாவட்டம், உவரியை சேர்ந்த பாக்கியதாஸ், ஆன்றணி சூசை, கிளாட்வின், செங்கிஸ்கான், உதயகுமார், தூத்துக்குடியை சேர்ந்த யோனாஸ், கிராஸ்லின் ஆகிய 15 மீனவர்கள் துபாய் நாட்டில் தங்கி மீன் பிடித்து வந்தனர். கடந்த அக்டோபர் 22-ம் தேதி அந்நாட்டைச் சேர்ந்த ஜிம்மா சாலோம், அப்துல் ரஷித் ஆகியோருக்கு சொந்தமான 2 விசைப்படகுகளில் துபாயைச் சேர்ந்த இரு மீனவர்களுடன் மீன்பிடிக்கச் சென்றனர்.
எல்லை தாண்டியதாக கைது
ஆழ்கடலில் மின்பிடித்துக் கொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த ஈரான் கடற்படையினர் எல்லை தாண்டியதாக இவர்களை கைது செய்தனர். இத்தகவலை மீனவர்கள், சர்வதேச மீனவர் வளர்ச்சி அறக்கட்டளை தலைவர் ஜஸ்டின் ஆன்றணியிடம் தெரிவித்துள்ளனர்.
தங்களது செல்போன், துணிகளை ஈரான் கடற்படையினர் எடுத்துச் சென்று விட்டதாகவும், தற்போது தங்களது விசைப்படகுகளில் சிறை வைக்கப்பட்டுள்ளதாகவும், சரியான உணவு இல்லை எனவும் அவர்கள் வேதனையுடன் கூறியுள்ளனர். மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கக்கோரி, ஈரானிலுள்ள இந்திய தூதரகத்துக்கும், மத்திய மாநில அரசுகளுக்கும் ஜஸ்டின் ஆன்றணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT