Published : 25 Nov 2017 09:13 AM
Last Updated : 25 Nov 2017 09:13 AM

திண்டுக்கல்லில் பழிக்குப் பழியாக நடந்த சம்பவம்: 3 துப்புரவு பணியாளர்கள் கொலை

திண்டுக்கல் நகரில் ஆட்டோ டிரைவர் கொலை வழக்கில் பழிக்கு பழியாக 3 துப்புரவுப் பணியாளர்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். இவர்கள் ஜாமீனில் வந்திருந்தபோது இப்பரிதாப சம்பவம் நிகழ்ந்துள்ளது.

திண்டுக்கல் நெட்டுத் தெருவைச் சேர்ந்தவர்கள் பாலமுருகன்(45), மதுரைவீரன்(35), சரவணன்(38). இவர்களில் மதுரைவீரன், சரவணன் சகோதரர்கள். இவர்கள் 3 பேரும் திண்டுக்கல் மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவுப் பணியாளர்களாக பணிபுரிந்து வந்தனர்.

பாலமுருகன் திண்டுக்கல் ரவுண்ட் ரோடு தனியார் பள்ளி அருகேயும், மதுரைவீரன் நாகல் நகர் மேம்பாலத்துக்கு கீழேயும், சரவணன் பொன்னப்ப நாடார் சந்து பகுதியிலும் நேற்று காலை துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது காலை 8.55 மணிக்கு ரவுண்ட் ரோடு பகுதிக்கு முகத்தை மறைத்து கர்சீப் கட்டிக்கொண்டு வந்த ஒரு கும்பல் குப்பைகளை அள்ளிக் கொண்டிருந்த பாலமுருகனை அரிவாளால் வெட்டியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

பாலமுருகனுடன் துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருந்த அவரது மனைவி வள்ளி கண் எதிரிலேயே கொலையை செய்துவிட்டு, அந்த கும்பல் மோட்டார் சைக்கிள்களில் தப்பிச் சென்றது.

போலீஸார் கொலை நடந்த இடத்துக்கு வரும் முன்பே நாகல் நகர் மேம்பாலம் அருகே துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருந்த மதுரைவீரனை ஒரு கும்பல் ஓடஓட விரட்டி அரிவாளால் வெட்டிக் கொலை செய்தது.

காலையில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களில் அடுத்தடுத்து நடந்த 2 கொலைகளால் அதிர்ச்சியில் இருந்த போலீஸாருக்கு மேலும் ஒரு அதிர்ச்சியாக திண்டுக்கல் பொன்னப்ப நாடார் சந்து பகுதியில் துப்புரவுப் பணியில் ஈடுபட்ட சரவணனை ஒரு கும்பல் வெட்டிக் கொலை செய்தது. அரை மணி நேரத்தில் 3 கொலைகளும் நடந்துள்ளன.

கொலைக்கான காரணம்: திண்டுக்கல் என்.எஸ்.கே. நகரைச் சேர்ந்தவர் வேளாங்கண்ணி. இவரது நண்பர் சோமு என்கிற சோமசுந்தரம்(28). ஆட்டோ ஓட்டுநரான இவர் கடந்த ஆண்டு திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் திண்டுக்கல் நெட்டுத் தெருவைச் சேர்ந்த தற்போது கொலையான பாலமுருகன், மதுரைவீரன், சரவணன் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளனர்.

சோமுவை கொலை செய்தவர்களை பழிக்குப் பழியாக கொலை செய்வதற்காகவே வேளாங்கண்ணியின் ஆதரவாளர்கள் துப்புரவுப் பணிக்கு சென்ற பாலமுருகன், மதுரைவீரன், சரவணன் ஆகியோரை கொலை செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

திண்டுக்கல் காவல் கண்காணிப்பாளர் ஆர்.சக்திவேல் கூறுகையில், கொலையாளிகளைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கொலையாளிகள் அடையாளம் தெரிய வந்துள்ளது. விரைவில் கைது செய்வோம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x