Published : 21 Nov 2017 02:44 PM
Last Updated : 21 Nov 2017 02:44 PM

போட்டி போட்டு ஆற்றுப்பாலத்தில் நேருக்கு நேர் மோதிய பேருந்துகள்: 20 பேர் காயம்

திருச்செந்தூரில் கல்லூரிப் பேருந்து ஓட்டுநர்களின் போலி சாகசத்தால் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் 15 மாணவிகள் உட்பட 20 பேர் காயமடைந்தனர்.

திருச்செந்தூரில் பிரபல தனியார் பொறியியல் கல்லூரிக்குச் சொந்தமான பேருந்தில் தினமும் மாணவிகள் பயணம் செய்வது வழக்கம். இதே போல் தூத்துக்குடியில் பிரபல தனியார் பொறியியல் கல்லூரிக்கு சொந்தமான பேருந்திலும் மாணவிகள் சென்று வருவார்கள்.

மாணவிகள் பேருந்தில் இருப்பதால் ஓட்டுநர்கள் சாகசத்தை வெளிப்படுத்தும் விதமாக வேகமாக செலுத்துவது  நிறைய இடங்களில் நடக்கின்றன. இன்று இரண்டு கல்லூரி பேருந்துகளும் எதிர் எதிர் திசையில் வந்தன. இரணடு பேருந்துகளிலும் மாணவிகள் இருந்துள்ளனர். திருச்செந்தூர் அருகிலுள்ள ஆத்தூர் ஆற்றுப்பாலத்தில் எதிரெதிரே வந்தபோது போட்டி போட்டுக்கொண்டு, ஒதுங்காமல் வந்ததில் இரண்டு பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டன.

இதில் இரண்டு பேருந்துகளின் முன் பாகமும் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் பேருந்தில் இருந்த 15 மாணவிகள் உட்பட 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அனைவரும் ஆம்புலன்ஸ் மூலம் ஆத்தூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து ஆத்தூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குறுகலான பாலத்தில் போட்டி போட்டுக்கொண்டு செல்ல முயன்றதில் நேருக்கு நேர் பேருந்துகள் மோதியுள்ளன. அதிரஷ்டவசமாக பேருந்துகள் எதுவும் பாலத்திலிருந்து கீழே விழவில்லை. விழுந்திருந்தால் உயிர்சேதம் ஏற்பட்டிருக்கும் என்று சம்பவத்தைப் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x