Published : 20 Nov 2017 08:29 AM
Last Updated : 20 Nov 2017 08:29 AM

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கச்சத்தீவு அருகே ராமேசுவரம் மீனவர்கள் 8 பேர் இலங்கை கடற்படையால் சிறைபிடிப்பு

எல்லைத் தாண்டி வந்து மீன் பிடித்ததாக ராமேசுவரம் பகுதியைச் சேர்ந்த 8 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர்.

ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிமடம் பகுதிகளைச் சேர்ந்த 1500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் 441 விசைப்படகுகளில் நேற்று முன்தினம் காலை மீன் பிடிக்கச் சென்றனர். இவர்களில் ஒரு தரப்பினர் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து கப்பல்களில் இலங்கை கடற்படையினர் வந்தனர்.

அங்கு மீன் பிடித்துக்கொண்டிருந்த தங்கச்சிமடத்தைச் சேர்ந்த கில்டாமேரி என்பவரின் விசைப்படகில் இருந்த ஜெய்லஸ் (35), மெல்சன் (38), விஜய் (30), நவீன் (31) ஆகிய மீனவர்களையும், விசைப்படகையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றனர்.

இதேபோல் நேற்று அதிகாலை கச்சத்தீவு அருகே மற்றொரு பகுதியில் மண்டபத்தைச் சேர்ந்த பூபதி என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் மீன்பிடித்த சண்முகவேல், நடராஜன், முனியாண்டி, தர்மராஜ் ஆகிய 4 மீனவர்களையும் விசைப்படகுடன் சிறைபிடித்துச் சென்றனர்.

8 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர், யாழ்ப்பாணம் மீன்வளத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். பின்னர் அவர்கள் ஊர்க்காவல்துறை நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டனர். மீனவர்களை வரும் 30-ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி ஜாய்மஹில் மகாதேவன் உத்தரவிட்டார். அதனையடுத்து 8 மீனவர்களும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களுடன் சேர்த்து 117 தமிழக மீனவர்கள் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x