Published : 18 Nov 2017 11:52 AM
Last Updated : 18 Nov 2017 11:52 AM

போயஸ் இல்ல சோதனை மூலம் ஜெ. புகழுக்கு எந்த களங்கமும் ஏற்படவில்லை: எம்.பி. அன்வர் ராஜா

போயஸ் இல்லத்தில் நடைபெற்ற சோதனையின் மூலம் ஜெயலலிதாவின் புகழுக்கு எந்த களங்கமும் ஏற்படவில்லை. அவர் வாழ்ந்த அறைக்குள் எந்த சோதனையும் நடைபெறவில்லை என்று எடப்பாடி அணியைச் சேர்ந்தவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்வர் ராஜா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த அவர் கூறியதாவது:

''போயஸ் இல்லத்தில் வருமான வரி சோதனை வருத்தத்தை ஏற்படுத்தினாலும் ஜெ. மறைவுக்குப் பிறகு போயஸ் தோட்டத்தை முழுமையாகத் தன் கைவசம் வைத்திருந்தவர்களை சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்பதற்காக மத்திய அரசு வருமான வரி சோதனையைக் கையில் எடுத்திருக்கிறது.

சோதனையில் என்னென்ன ஆதாரங்கள் கிடைத்தன, எதற்காக இந்த சோதனை என்பது சோதனை முழுமையாக முடிந்த பின்னரே தெரியும்.

வருமான வரி சோதனைக்கும் மாநில அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. முன்னதாக நான்கு நாட்கள் மேற்கொண்ட சோதனைகளின்போது கிடைத்த தகவலின்படியே இந்த சோதனை நடத்தப்படுகிறது.

ஜெயலலிதா இருந்திருந்தால் இந்த பேச்சுக்கே இடமில்லை. அப்போது இத்தகைய பிரச்சினைகளே ஏற்பட்டிருக்காது. இந்த சோதனையின் மூலம் ஜெயலலிதாவின் புகழுக்கு எந்த களங்கமும் ஏற்படவில்லை. அவர் வாழ்ந்த அறைக்குள் எந்த சோதனையும் நடைபெறவில்லை.

அந்த அறையைத் தாண்டி எங்கெங்கெல்லாம் ஐ.டி. துறையினருக்கு சந்தேகம் இருக்கிறதோ அங்கெல்லாம் சோதனை நடத்தப்பட்டது.

சோதனை குறித்த தொடர் நடவடிக்கையின் விவரங்கள் வெளியான பிறகே, இது அரசியல் செயல்பாடா என்று தெரியவரும். இதில் மாநில அரசு ஒத்துழைப்பு அளிக்கிறது, இல்லை என்ற பேச்சுக்கே இடமில்லை. சொல்லப்போனால் இதற்கும் எங்களுக்கும் சம்பந்தமே இல்லை. தன்னிச்சையாக செயல்படும் வருமான வரித்துறையின் இந்த செயல்பாட்டுக்கு நாங்கள் எப்படி பொறுப்பாக முடியும்'' என்றார் அன்வர் ராஜா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x