Published : 13 Nov 2017 01:37 PM
Last Updated : 13 Nov 2017 01:37 PM
கீழ்ப்பாக்கத்தில் நகை வேலை செய்யும் தொழிலாளியிடம் ஒப்படைத்த 8 கிலோ தங்கம் மாயமானதாக வேலைக்காரர் மீது உரிமையாளர் புகார் அளித்துள்ளார்.
சென்னை கீழ்ப்பாக்கம், ராஜரத்தினம் தெருவில் வசிப்பவர் உக்கம் ராஜ்(44), உத்திரபிரதேசத்தைச் சேர்ந்த இவர் பல ஆண்டுகளாக தங்க நகை தயாரித்து அதை கடைகளுக்கு சப்ளை செய்யும் தொழில் செய்து வருகிறார். பிரபல முன்னணி நகைக்கடைகள் அளிக்கும் தங்கக் கட்டிகளைப் பெற்று ஆர்டர் எடுத்து நகைகள் செய்து கொடுக்கும் பணியையும் செய்து வருகிறார்.
நகைகளைச் செய்வதற்காக இவரது பட்டறையில் விழுப்புரத்தைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் உட்பட 50க்கும் மேற்பட்ட தொழிலாளிகள் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஆர்டரின் பேரில் பெறப்பட்ட 50 கிலோ தங்கத்தை, தன்னிடம் வேலை பார்த்து வரும் ராஜேஷ் என்பவரிடம் நகை செய்யக் கொடுத்தார்.
வாரத்தின் கடைசி நாளான நேற்று செய்யப்பட்ட நகைகள், மீதமுள்ள தங்கம் ஆகியவற்றின் அளவைச் சரி பார்த்தபோது சுமார் 8 கிலோ தங்கம் குறைவாக இருப்பது தெரியவந்தது. இது பற்றி ராஜேஷிடம் கேட்டபோது முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறி உள்ளார்.
இது சம்பந்தமாக ஒரு நாள் முழுதும் விசாரித்தும் உண்மை வராததால் கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் உக்கம்ராஜ் புகார் அளித்ததன் பேரில் போலீஸார், ராஜேஷ் உள்ளிட்ட சிலரை பிடித்து விசாரித்து வருகிறார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT