Published : 12 Nov 2017 12:46 PM
Last Updated : 12 Nov 2017 12:46 PM

வடக்கிலிருந்து தெற்கே வலசை வரும் பறவைகள் : ஆண்டுக்கு ஆண்டு எண்ணிக்கை குறைவது ஏன்?

றவைகள் வலசை செல்வது குளிர்காலம் தொடங்கியதும் உலகெங்கும் நடக்கும் முக்கிய நிகழ்வு. அந்த வகையில், தற்போது பறவைகளின் வலசை தொடங்கியிருக்கிறது.

பொதுவாக உலகின் வடபகுதிலிருந்து தென் பகுதிக்கு பறவைகள் வலசை வருகின்றன. குளிர்காலத்தில் வடபகுதியிலுள்ள நீர்நிலைகள் பனியால் உறைந்து விடும். இதனால், அங்கு மீன், பூச்சி, பழங்கள் உள்ளிட்ட உணவுகள் பறவைகளுக்குக் கிடைக்காது. இதனால், காடுகள், சதுப்பு நிலங்கள், நீர் நிலைகளை சார்ந்து வாழும் பறவைகள் குளிர் காலத்தில் மிதவெப்பமண்டல நாடுகளுக்கு இடம் பெயர்கின்றன.

மத்திய ஆசிய வான்வழி பாதையில்..

உலகெங்கும் பறவைகளின் வான்வழி வலசைப் பாதைகள் பன்னிரண்டுக்கும் மேல் உள்ளன. இந்தி யாவுக்கு வரும் பறவைகள் கிழக்கு ஐரோப்பா, மத்திய ரஷ்யா, தென் சீனா, உஸ்பெகிஸ்தான், கசகிஸ்தான், மங்கோலியா வழியான மத்திய ஆசிய வான் வெளி வலசைப் பாதையையே தேர்ந்தெடுக்கின்றன.1980-லிருந்து இந்தியாவுக்கு வலசை வரும் வெளி நாட்டுப் பறவைகளின் வருகை வெகுவாக குறைந்து வருவதாக அச்சம் தெரிவிக்கும் பறவையியல் ஆர்வலர்கள், நமது சுற்றுச்சூழல் வேகமாக சீர்கெட்டு வருவதே இதற்கு காரணம் என்கிறார்கள்.

அக்டோபர் தொடங்கி மார்ச் வரை வெளிநாட்டு பறவைகள் தமிழகம் உள்ளிட்ட தென் பகுதிகளில் தங்கி இருக்கும். அதன்படி, தற்போது வெளிநாட்டுப் பறவைகள் தமிழகம் நோக்கி வரத் தொடங்கிவிட்டன. மதுரை மாவட்டம் சாமநத்தம், அவனியாபுரம், வெள்ளக்கல், அரிட்டாபட்டி, கள்ளிக்குடி, சிவரக்கோட்டை, நேசநேரி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள கண்மாய் களுக்கு வெளிநாட்டு பறவைகள், கூட்டம் கூட்டமாக வரத்தொடங்கியுள்ளன.

நட்சத்திரங்கள் அமைப்பை வைத்து..

birds_valasai_6.JPG ரவீந்திரன் நடராஜன் 100 

இதுகுறித்து நம்மிடம் பேசிய பறவையியல் ஆர்வலரான மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த ரவீந்திரன் நடராஜன், “கடந்த காலங்களை ஒப்பிடுகையில் சிலவகை பறவைகள் இப்போது நம்பக்கம் வருவதே இல்லை. வெளிநாட்டுப் பறவைகள் ஆயிரக் கணக்கான கிலோ மீட்டர்களைக் கடந்து இந்தியாவுக்கு வருகின்றன. அப்படி வரும்போது வழியில் தேவையான உணவு கிடைக்காமல் போகலாம் என்பதால், வலசை கிளம்பும் போதே வழக்கத்தைவிட கூடுதலான உணவை உண்டு உடம்பில் கொழுப்பை ஏற்றிக்கொண்டு புறப்படுகின்றன. உள்ளான் இன பறவைகள், காட்டு வாத்துகள், சிலவகை குருவி இனங்கள், கொக்கு - நாரை இனங்கள் இவற்றோடு கழுகு இனங்களும் இந்தியாவுக்கு வலசை வருகின்றன.

இவற்றில் சில பறவைகள் பகலில் இடம்பெயரும்; சில இரவில் பறக்கும். சூரிய வெப்பத்தால் சக்தி இழந்து சோர்ந்து விடாமல் இருக்கவே சில பறவைகள் இரவு நேரப் பயணம் மேற்கொள்கின்றன. இவைகள் இரவில் நட்சத்திரங்களின் அமைப்பை வைத்து, தாங்கள் செல்ல வேண்டிய திசையை எளிதாக அறிகின்றன ” என்றார்.

எவரெஸ்ட்டை கடக்கும் ரகசியம்

சில பறவைகள், ஒரு நாளைக்கு ஐம்பது கி.மீ தூரம் பறக்கும். ஓரிரு நாட்கள் ஓய்வெடுத்துக் கொண்ட பிறகு மீண்டும் அடுத்த இலக்கை நோக்கிப் பறக்க ஆரம்பிக்கும். சிலவகை பறவைகள், எத்தனை ஆயிரம் கிலோ மீட்டரையும் தொடர்ச்சியாக பயணித்து இலக்கை அடைந்துவிடும். கோண மூக்கு உள்ளான் போன்ற பறவைகள் இரண்டு மூன்று நாள்கள்கூட தொடர்ச்சியாக பறக்கும் திறன் கொண்டவை. வாத்து இனங்கள் ஒரு நாளில் 150 கி.மீ பறந்தால் அடுத்த ஒருவாரத்துக்கு எங்காவது ஓரிடத்தில் ஓய்வெடுத்துக் கொள்ளும்.

இதுகுறித்தும் பேசிய ரவீந்திரன் நடராஜன், “வலசை பாதையில் பறவைகளின் பறக்கும் சக்தியை மனித அறிவால் துல்லியமாக அளவிட முடியாது. உதாரணமாக வரித்தலை வாத்து மங்கோலியாவில் இருந்து கிளம்பி இமயமலையின் எவரெஸ்ட் சிகரத்தின் மேலாகப் பறந்து தென் இந்திய பகுதிகளை வந்தடைகிறது. உறையும் பனி சூழ்ந்த இமய மலையை இந்தப் பறவை ஐந்தரை நாட்களில் சர்வசாதாரணமாய் கடக்கிறது. எவரெஸ்ட் சிகரம் ஏறுவதற்கு மனிதனுக்கு எத்தனையோ உயிர்க்காப்புச் சாதனங்கள் தேவைப்படுகின்றன. ஆனால், இவையெல்லாம் இல்லாமல் இந்த வாத்துகளும், சில வகை கொக்குகளும் எவரெஸ்ட் சிகரத்தை கடக்கின்றன.

இந்தப் பறவைகளால் மட்டும் எப்படி இது சாத்தியமாகிறது என்பது இதுவரை விஞ்ஞானிகளுக்கே விளங்காத புதிர்! பறவைகளின் வலசை போக்கை வைத்தே, நாம் எத்தகைய சூழலில் வாழ்ந்து கொண் டிருக்கிறோம் என்பதை கணிக்க முடியும் எங்கிருந்தோ ஆயிரக் கணக்கான கிலோ மீட்டர்கள் கடந்து இங்கு வந்துவிட்டுப் போகும் பறவைகள் நமது இயற்கைச் சூழலை துளியும் கெடுத்துவிட்டுப் போவதில்லை. ஆனால், பிறந்தது முதல் இங்கேயே வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் நம்மைச் சுற்றியுள்ள இயற்கையை கண்டபடி பாழ்படுத்திக் கொண்டிருக் கிறோம். அதன் தாக்கம் தான் வலசை வரும் பறவைகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது” என்றார்.

(குறிப்பு: இங்கு பிரசுரிக்கப்பட்டிருப்பது மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு வலசை வந்துள்ள பறவைகளின் படங்கள்)

படங்கள் உதவி: ரவீந்திரன் நடராஜன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x