Published : 03 Nov 2017 09:31 AM
Last Updated : 03 Nov 2017 09:31 AM

நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் 13 பேர் சிறைபிடிப்பு

இலங்கை கடல் பகுதியில் மீன்பிடித்ததாகக் கூறி ஜெகதாபட்டினம், மண்டபம் மீனவர்கள் 13 பேரை அந்நாட்டு கடற்படையினர் சிறைபிடித்தனர். அவர்களது விசைப் படகுகளையும் கைப்பற்றினர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சந்திரபோஸ், தெய்வகுமார், குகன், வினோத், ப்ரவின், விஜயேந்திரன், செல்வநாதன், முருகன், பாண்டி ஆகிய 9 மீனவர்கள் நேற்று முன்தினம் கடலுக்குச் சென்றனர்.

இவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை சிறைபிடித்தனர். இலங்கை கடற்படை விரட்டி அடித்ததால் விசைப்படகு சேதமடைந்தது.

இதேபோல் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் இருந்து கடலுக்குச் சென்ற ராஜேந்திரன் என்பவரது விசைப்படகையும் நெடுந்தீவு அருகே கைப்பற்றினர். அதில் இருந்த 4 மீனவர்களையும் சிறைபிடித்தனர்.

இவர்கள் காங்கேசன் கடற்படை முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டு யாழ்ப்பாணம் மாவட்ட மீன்வளத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

13 மீனவர்களும் மீன்வளத் துறை அதிகாரிகளின் விசாரணைக்கு பிறகு ஊர்க்காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

பின்னர் யாழ்ப்பாணம் சிறையில் மீனவர்கள் அடைக்கப் பட்டனர்.

ஏற்கெனவே தமிழகம், புதுச்சேரியைச் சேர்ந்த 54 மீனவர்கள் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x