Published : 30 Oct 2017 07:13 PM
Last Updated : 30 Oct 2017 07:13 PM

ஜெயராமன் மீது தொடரப்பட்டுள்ள தேசத் துரோக வழக்கை திரும்பப் பெறுக: அன்புமணி

பேராசிரியர் ஜெயராமன் மீது தொடரப்பட்டுள்ள தேசத் துரோக வழக்கை அரசும், காவல்துறையும் திரும்பப் பெற வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தஞ்சாவூர் மாவட்டம் கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் மீத்தேன் திட்டத்திற்கு எதிராக போராடி வரும் பேராசிரியர் ஜெயராமன், 'நதிகள் இணைப்புத் திட்டம்: ஆறுகளை பிடுங்கி விற்கும் இந்தியா' என்ற தலைப்பில் புத்தகம் எழுதியதற்காக அவர் மீது தேசத் துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. கருத்துரிமையை நசுக்கும் வகையிலான தமிழக அரசின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கதாகும்.

நதிகள் இணைப்புத் திட்டம் தொடர்பான பேராசிரியர் ஜெயராமனின் நிலைப்பாடு குறித்து பலருக்கும் மாறுபட்ட கருத்துகள் இருக்கலாம். ஆனால், அரசின் திட்டங்கள் குறித்து கருத்து கூறும் உரிமையை இந்திய அரசியலமைப்புச்சட்டம் இந்தியாவின் அனைத்துக் குடிமகன்களுக்கும் வழங்கியுள்ளது. அதை ஏற்காமல் அரசுக்கு எதிராக கருத்தே கூறக்கூடாது என்று மிரட்டும் வகையில், ஜெயராமன் மீது தேசத் துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பது இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரான செயலாகும்.

கதிராமங்கலத்தில் மத்திய, மாநில அரசுகளின் மீத்தேன் உள்ளிட்ட ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக போராடுவதாலேயே அவரை பழிவாங்கும் வகையில் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே அவர் மீது இரு வழக்குகளை பதிவு செய்ததுடன், குண்டர் சட்டத்தில் கைது செய்யவும் தமிழக அரசு திட்டமிட்டது. ஆனால், பாமக உள்ளிட்ட கட்சிகளின் எதிர்ப்பால் அந்த நடவடிக்கை கைவிடப்பட்டது. பொது நலனுக்காக போராடுவோர் மீது பொய்வழக்கு தொடர்ந்து மிரட்டுவது சரியல்ல.

எனவே, பேராசிரியர் ஜெயராமன் மீது தொடரப்பட்டுள்ள தேசத் துரோக வழக்கை அரசும், காவல்துறையும் திரும்பப் பெற வேண்டும். கதிராமங்கலம் போராட்டத்திற்காக ஜெயராமன் உள்ளிட்ட போராட்டக்குழுவினர் மீது கடந்த காலங்களில் பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும் அரசு ரத்து செய்ய வேண்டும்'' என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x