Published : 30 Oct 2017 09:13 AM
Last Updated : 30 Oct 2017 09:13 AM

இரு அணிகள் உரிமை கோரியதால் முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னம் யாருக்கு?- தேர்தல் ஆணையம் இன்று தீர்ப்பு

முடக்கப்பட்ட அதிமுகவின் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது தொடர்பான விசாரணை டெல்லியில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தில் இன்று நடைபெறவுள்ளது.

முதல்வராகவும் அதிமுக பொதுச் செயலாளராகவும் இருந்த ஜெயலலிதா மரணம் அடைந்ததைத் தொடர்ந்து அதிமுக இரு அணிகளாக பிரிந்தன. அதனைத் தொடர்ந்து ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது இரட்டை இலை சின்னத்துக்கு இரு தரப்பும் உரிமை கோரியதால் தேர்தல் ஆணையம் சின்னத்தை முடக்கியது.

சின்னம் முடக்கப்பட்டபோது சசிகலா, தினகரனுக்கு ஆதரவாக இருந்த முதல்வர் பழனிசாமி அணியினர் பின்னர் ஓ.பன்னீர்செல்வம் அணியுடன் இணைந்தனர். இதனால் பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஒரு அணியாகவும் டிடிவி தினகரன் தரப்பினர் தனி அணியாகவும் பிரிந்து, இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கோரி வருகின்றனர்.

இரட்டை இலை சின்னம் எங்களுக்கே வேண்டும் என இரு தரப்பினரும் தேர்தல் ஆணையத்தில் ஆவணங்களை அளித்துள்ளனர். இதுதொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் ஏ.கே.ஜோதி தலைமையில் கடந்த 6-ம் தேதி முதல்கட்ட விசாரணை நடைபெற்றது. அதன்பிறகு பலகட்ட விசாரணைகள் நடந்து முடிந்துள்ளன.

கடந்த 16-ம் தேதி நடந்த விசாரணையின்போது, முதல்வர் பழனிசாமி தரப்பினர் அளித்த பிரமாணப் பத்திரங்களில் போலி கையெழுத்துக்கள் இருப்பதாகவும் இதுதொடர்பான சாட்சியங்களை விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் தினகரன் தரப்பு கோரியது. இதனை தேர்தல் ஆணையம் ஏற்கவில்லை.

அதனைத் தொடர்ந்து இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் என தினகரன் தரப்பு கோரியது. இதற்கு பழனிசாமி தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது. மீண்டும் கடந்த 23-ம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது இரு தரப்பினரும் ஆஜராகி தங்களது வாதங்களை முன்வைத்தனர். ஆனாலும், எந்த முடிவையும் அறிவிக்காத தேர்தல் ஆணையம் விசாரணையை அக்டோபர் 30-ம் தேதிக்கு தள்ளிவைத்தது.

அதன்படி டெல்லி தேர்தல் ஆணைய அலுவலகத்தில் இன்று மாலை 3 மணிக்கு மீண்டும் விசாரணை நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க முதல்வர் பழனிசாமி - ஓபிஎஸ் தரப்பில் வி.மைத்ரேயன், கே.பி.முனுசாமி ஆகியோர் நேற்று டெல்லி புறப்பட்டுச் சென்றனர். தினகரன் தரப்பில் கர்நாடக மாநில அதிமுக செயலாளர் புகழேந்தி உள்ளிட்டோர் ஆஜராக உள்ளனர்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவால் கடந்த 11 மாதங்களாக காலியாக உள்ள ஆர்.கே.நகர் தொகுதியில் வரும் டிசம்பர் 31-க்குள் இடைத்தேர்தல் நடத்த தயாராக இருப்பதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. எனவே, இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் இன்று முடிவு அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரட்டை இலை சின்னம் யாருக்கு கிடைக்கிறதோ அவர்களே உண்மையான அதிமுக என கருதப்படுவார்கள். எனவே, சின்னம் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் அளிக்கவுள்ள தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x