Published : 22 Oct 2017 01:32 PM
Last Updated : 22 Oct 2017 01:32 PM

பேரணாம்பட்டு, ஆம்பூரில் டெங்கு காய்ச்சலுக்கு 3 பேர் பலி: வருவாய் கோட்டாட்சியர் ஆய்வு

பேரணாம்பட்டு மற்றும் ஆம்பூரில் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் சிகிச்சை பெற்றுவந்த 3 பேர் உயிரிழந்தனர்.

பேரணாம்பட்டு ரஷீதாபாத் பகுதியைச் சேர்ந்தவர் நசீர். கூலித் தொழிலாளி. இவரது மனைவி கவுசர் (34). கடந்த ஒரு வாரமாக கடுமையான காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இரு தினங்களுக்கு முன்பு பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள் தென்பட்டதால் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் அவர் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நேற்று முன்தினம் சிகிச்சைக்கு சென்றார். அங்கு அவர் உயிரிழந்தார். அதேபோல், பேரணாம்பட்டு அடுத்துள்ள கோக்கலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் குமரேசன். இவரது மூன்றரை வயது மகள் காவ்யாவுக்கு சில நாட்களாக கடுமையான காய்ச்சல் இருந்தது. வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று உயிரிழந்தார்.

இதற்கிடையில், பேரணாம்பட்டு நகரின் பல்வேறு பகுதிகளில் வேலூர் வருவாய் கோட்டாட்சியர் செல்வராஜ் தலைமையில் வட்டாட்சியர் விஸ்வநாதன், நகராட்சி ஆணையாளர் ஸ்டான்லி பாபு உள்ளிட்டோர் நேற்று டெங்கு கொசு ஒழிப்புப் பணிகளை ஆய்வு செய்தனர். தனியார் டேனரி தொழிற்சாலை ஒன்றில் ஆய்வு செய்தபோது, அங்கு டெங்கு கொசுப் புழுக்கள் வளர்வது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அந்த தொழிற்சாலை நிர்வாகத்துக்கு வருவாய் கோட்டாட்சியர் செல்வராஜ் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தார்.

ஆம்பூர்

ஆம்பூர் ரத்னாநகரைச் சேர்ந்தவர் முஹ்மது சலீம் (37). இவரது மகன் முஹ்மது யாஹியா (7). தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தார். சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர், வேலூர் சிஎம்சி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கடந்த 18-ம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x