Published : 22 Oct 2017 01:17 PM
Last Updated : 22 Oct 2017 01:17 PM

எந்தத் தேர்தல் வந்தாலும் அதிமுகவே வெற்றி பெறும்: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேச்சு

உள்ளாட்சித் தேர்தல் மட்டுமல்ல எந்த தேர்தல் வந்தாலும் அதிமுகவே வெற்றி பெறும் என மாநில போக்குவரத்துத் துறை அமைச் சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

கரூர் நகர அதிமுக சார்பில் அதிமுக 46-ம் ஆண்டு விழா பொதுக்கூட்டம் நகரச் செயலாளர் வை.நெடுஞ்செழியன் தலைமையில் கரூர் 80 அடி சாலையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. கூட்டத்தில், மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசியது: தமிழகத்தில் நல்லாட்சி நடக்கிறது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை எளிதாக அணுகி பிரச்சினைகளைக் கூறி தீர்வு காண முடிகிறது.

ஆட்சியைப் பற்றி குறை சொல்ல முடியவில்லை என்பதால் எதிர்க்கட்சி தலைவர் டெங்கு ஆட்சி என்கிறார். திமுக ஆட்சிக்காலத்தில் சிக்குன் குனியா, பன்றிக் காய்ச்சல், பறவைக் காய்ச்சல் என பல நோய்கள் வந்தன. தேசிய அளவில் ஸ்பெக்ட்ரம் ஊழல் நடைபெற்றது. அப்படியென்றால் திமுகவுக்கு என்ன பெயர் வைப்பது?

உள்ளாட்சித் தேர்தல் மட்டுமல்ல, மக்களவை தேர்தல், சட்டப்பேரவைத் தேர்தல் என எந்தத் தேர்தல் வந்தாலும், நூறாண்டுகள் அல்ல ஆயிரமாண்டுகள் ஆனாலும், அனைத்து தேர்தல்களிலும் அதிமுகவே வெற்றி பெறும் என்றார்.

தலைமை கழக பேச்சாளர்கள் நடிகர் கே.ஆர்.சிங்கமுத்து, நள்ளாற்று நடராஜன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாவட்ட அவைத்தலைவர் ஏ.ஆர்.காளியப்பன், மாவட்ட துணை செயலாளர் பசுவை பி.சிவசாமி, முன்னாள் எம்எல்ஏக்கள் காமராஜ், கு.வடிவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x