Published : 22 Oct 2017 09:48 AM
Last Updated : 22 Oct 2017 09:48 AM

தலைமன்னார் அருகே பாம்பன் நாட்டுப் படகு மீனவர்கள் 4 பேர் கைது

பாம்பன் நாட்டுப் படகு மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் இருந்து 50-க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகளில் 300-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க நேற்று முன்தினம் கடலுக்குச் சென்றனர். இவர்கள் நேற்று அதிகாலை பாக் ஜலசந்தி கடல் பகுதியில் தலைமன்னார் அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், அருள் சகாயம் என்பவருக்குச் சொந்தமான நாட்டுப் படகை கைப்பற்றி அதில் இருந்த சகாயம், ரீகன், மேக்சன், மாரியப்பன் ஆகிய 4 பேரை இலங்கை கடல் பகுதியில் மீன்பிடித்தாகக் கூறி சிறைபிடித்தனர்.

பின்னர் அவர்கள் 4 பேரும் தலைமன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். விசாரணைக்குப் பிறகு மன்னார் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். மீனவர்களை நவ. 3-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர். கடந்த 3 மாதங்களாக விசைப்படகு மீனவர்களை சிறைபிடித்து வந்த இலங்கை கடற்படையினர், தற்போது நாட்டுப் படகு மீனவர்களை சிறைபிடித்திருப்பது மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x