Published : 21 Oct 2017 11:17 AM
Last Updated : 21 Oct 2017 11:17 AM

டெங்கு காய்ச்சலால் பலி இல்லை என கூறிய அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் ‘திடீர்’ பல்டி: ‘‘அதிகாரிகள் கூறியதை சொன்னேன். நான் டாக்டர் அல்ல’’

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் டெங்கு பாதிப்பு குறித்து நான் ஆய்வு செய்தபோது, திண்டுக்கல் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என அதிகாரிகள் சொன்னதைத் தான் நான் சொன்னேன். நான் டாக்டர் இல்லை என வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி. சீனிவாசன் தெரிவித்தார்.

திண்டுக்கல் மாவட்டம், பழநி அருகே பாசனத்துக்காக பாலாறு பொருந்தலாறு அணையைத் திறந்துவைத்த அமைச்சர் சி.சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

டெங்கு காய்ச்சலுக்கு ஒருவர் கூட திண்டுக்கல் மாவட்டத்தில் இறக்கவில்லை என நான் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் கடந்தவாரம் ஆய்வு செய்தபோது மாவட்ட ஆட்சியர், அரசு மருத்துவமனை நலப்பணிகள் இணை இயக்குநர், சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர்கள் எல்லோரும் சேர்ந்து அறிக்கை கொடுத்தனர்.

அதன்படிதான், நான் மாவட்டத்தில் டெங்குவால் யாரும் பலியாகவில்லை என தெரிவித்தேன். அதிகாரிகள் சொன்னதைத்தான் நான் கூறினேன் என்றார்

அதன் பின்னர் ‘‘பழநி பகுதியில் காய்ச்சலுக்கு 20க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளதாக கூறுகிறார்களே’’ என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர், ‘‘அவர்கள் என்ன காய்ச்சலால் இறந்தனர் என என்னைக் கேட்டால், எனக்கு எப்படி தெரியும். நான் என்ன டாக்டரா? இதுகுறித்து அதிகாரிகளிடம்தான் நீங்கள் கேட்க வேண்டும் என்று கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x