Published : 18 Oct 2017 09:12 AM
Last Updated : 18 Oct 2017 09:12 AM

சசிகலாவை முதல்வராக்க அழைக்காதது ஏன்? - முன்னாள் ஆளுநர் விளக்கம்

சட்டப்பேரவை தலைவராக எம்எல்ஏக்களால் சசிகலா தேர்வு செய்யப்பட்டு கடிதம் கொடுத்தபோதும், சொத்துகுவிப்பு வழக்கு தீர்ப்பு வெளியாக இருந்ததால், முதல்வர் பதவியேற்க அவரை அழைக்கவில்லை என்று முன்னாள் ஆளுநர் வித்யாசாகர் ராவ் தன் நூலில் விளக்கியுள்ளார்.

தமிழக பொறுப்பு ஆளுநராக சி.எச்.வித்யாசாகர் ராவ் கடந்தாண்டு ஆகஸ்ட் முதல், ஓராண்டு பணியாற்றினார். ஜெயலலிதா கடந்தாண்டு டிசம்பர் 5-ம் தேதி மறைந்த பிறகு, தமிழக அரசியலில் ஏற்பட்ட ஸ்திரமற்ற தன்மையை சமயோஜிதமாக கையாண்டார். அவர் இதுதொடர்பாக எழுதிய புத்தகத்தை நேற்று முன்தினம் வெளியிட்டார். இதில், தமிழகத்தில் ஆளுநராக இருந்தபோது தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்துள்ளார். 6-ம் அத்தியாயத்தில், சசிகலா தொடர்பாக சில விளக்கங்களை அளித்துள்ளார். ஓபிஎஸ், பிப்.5-ம் தேதி பதவி விலகினார். அன்றே, சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தில் சசிகலா தலைவராக தேர்வானார். உடனடியாக, ஆளுநரை சந்தித்து ஆதரவு கடிதத்தை அளித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். ஆனால், ஆளுநர் உடனடியாக அழைக்கவில்லை.

இது தொடர்பாக அவர் தன் புத்தகத்தில்,‘‘ சசிகலா ஆட்சியமைக்க உரிமை கோரினார். மறுநாள் ஓபிஎஸ் ராஜினாமாவை ஏற்றேன். அன்று, உச்ச நீதிமன்றம், சசிகலா மீதான சொத்து குவிப்பு வழக்கில் ஒரு வாரத்தில் தீர்ப்பு பிறப்பிக்கப்படும் என்று அறிவித்தது. இந்த நேரத்தில் சசிகலாவை பதவியேற்க அழைப்பதா அல்லது தீர்ப்புக்காக காத்திருப்பதா என்ற மிகப்பெரிய சவால் என் முன் இருந்தது. சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து, தீர்ப்பு வரும்வரை காத்திருக்க முடிவு செய்தேன். சசிகலாவை பதவியேற்க அழைக்கவில்லை. இந்த விவகாரத்தை சாதுர்யமாக கையாண்டதால், சட்டச்சிக்கல் மற்றும் அரசியலில் கரும்புள்ளி விழுவதும் தவிர்க்கப்பட்டது” என்று குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x