Published : 14 Oct 2017 04:25 PM
Last Updated : 14 Oct 2017 04:25 PM

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும்: வாசன்

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழகத்தில் ராமேஸ்வரம் பகுதியில் இருந்து 1000க்கும் மேற்பட்ட மீனவர்கள் சுமார் 300 விசைப்படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இவர்களில் ஒரு தரப்பினர் நெடுந்தீவுக்கும், தலைமன்னாருக்கும் இடையே உள்ள கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் 5 மீனவர்களை விசைப்படகுடன் சிறைபிடித்துச் சென்றனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். இலங்கை கடற்படையின் இச்செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது.

பாக் நீரிணை பகுதியில் பாரம்பரியமாக மீன்பிடித்து வரும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து சிறைபிடித்து வருகின்றனர். சமீப காலங்களில் மீன்பிடிக்க சென்ற ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகை மற்றும் காரைக்கால் பகுதிகளை சேர்ந்த 42 மீனவர்கள் இலங்கை சிறையில் உள்ளனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் ராமேஸ்வரம் பகுதியில் இருந்து விசைப்படகில் மீன்பிடிக்க சென்ற 5 மீனவர்களையும், படகையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றனர்.

ஏற்கெனவே தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து வைத்துள்ள நிலையில் அவற்றை மீட்க முடியாமல் மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து வருகின்றனர்.

எனவே மத்திய அரசு இலங்கை கடற்படையின் அராஜகத்தை கண்டிப்பதோடு, இலங்கையிடம் தொடர்பு கொண்டு தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் நடவடிக்கை இனிமேலும் தொடரக்கூடாது என்பதை உறுதிப்பட தெரிவிக்க வேண்டும்.

மேலும் இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்யவும், இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களுக்கு சொந்தமான படகுகள் அனைத்தையும் ஒப்படைக்கவும் வலியுறுத்த வேண்டும்.

இந்திய - இலங்கை நாட்டு மீனவர்களுக்கு இடையேயான அடுத்த கட்டப்பேச்சு வார்த்தை விரைந்து நடைபெற ஏற்பாடு செய்ய மத்திய பாஜக அரசு முன்வர வேண்டும்.

மீனவர்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தையில் சுமுகத் தீர்வு எட்டப்படும் வரை இலங்கையால் தமிழக மீனவர்களுக்கு எந்தவித பாதிப்பும் வரக்கூடாது என்பதை இந்தியா இலங்கைக்கு அழுத்தம் கொடுத்து தெரிவிக்க வேண்டும்.

மத்திய அரசு தமிழக மீனவர்கள் பிரச்சினையில் சுமுகத் தீர்வு ஏற்படுத்திக்கொடுப்பதில் தீவிர ஆர்வம் காட்ட வேண்டும்'' என்று வாசன் கூறியுள்ளார்.

 

 

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x