Published : 13 Oct 2017 07:25 PM
Last Updated : 13 Oct 2017 07:25 PM
ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 12 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்யக் கோரி திமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கை உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற வேண்டும் என்று ஓபிஎஸ் அணி எம்.எல்.ஏ செம்மலை உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்
18 தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களை கொறடா பரிந்துரையின் பேரில் சட்டப்பேரவை தலைவர் தனபால் தகுதிநீக்கம் செய்தார். இதை எதிர்த்து தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் நீதிமன்றத்தை நாடினர். அந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் திமுக சார்பில் அதன் கொறடா சக்ரபாணி புதிய வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார்.
அதில் 18 எம்.எல்.ஏக்கள் போலவே கொறடா உத்தரவை மதிக்காமல் எதிர்த்து வாக்களித்த ஓபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 12 பேரையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார். நீதிபதி ரவிச்சந்திர பாபு இந்த வழக்கை தினகரன் எம்.எல்.ஏக்கள் வழக்குடன் இணைத்து விசாரித்து வருகிறார். வரும் நவம்பர் 3 அன்று தீர்ப்பு வழங்க உள்ளார்.
இந்த நிலையில் இந்த வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றக் கோரி அதிமுக எம்.எல்.ஏ., செம்மலை இன்று மனுதாக்கல் செய்துள்ளார். சபாநாயகரின் அதிகார வரம்பு குறித்த விசாரிக்கும் அதிகாரம் உச்ச நீதிமன்றத்திற்கே உள்ளது. ஆகவே சபாநாயகரின் அதிகார வரம்பு குறித்து விசாரிக்கும் அரசியல் சாசன அமர்வுக்கு வழக்கை மாற்ற வேண்டும் என செம்மலை தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனு விசாரணைக்கு ஏற்கப்படுமா என்பது பின்னர் தெரிய வரும்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT