Published : 13 Oct 2017 02:01 PM
Last Updated : 13 Oct 2017 02:01 PM

திருப்பத்தூர் அருகே கோயில்கள், மலைக் குகைகள் கண்டுபிடிப்பு: கி.பி.13 மற்றும் 14-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை

திருப்பத்தூர் அருகே கி.பி. 13 மற்றும் 14-ம் நூற்றாண்டில் விஜய நகர பேரரசர் காலத்தில் கட்டப்பட்ட கோயில்கள், கோட்டைச் சுவர், ரிஷிகள் வாழ்ந்த குகைகள் கண்டறியப்பட்டுள்ளன.

தமிழ்நாடு தொன்மை இயல் ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த காந்தி, திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியின் உதவிப் பேராசிரியர் முனைவர் மோகன்காந்தி, திருவள்ளுவர் பல்கலைக் கழக உறுப்பு கல்லூரியின் கவுரவ விரிவுரையாளர் யாழினி ஆகியோர் திருப்பத்தூர் அடுத்த சந்திரபுரம் கிராமத்தில் கள ஆய்வு மேற்கொண்டனர்.

அதில் பழமை வாய்ந்த கோயில், கோட்டைச்சுவர், ரிஷிகள் வாழ்ந்த குகைகள் கண்டறியப்பட்டுள்ளன.

இதுகுறித்து தமிழ்நாடு தொன்மை இயல் ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த ம.காந்தி ‘தி இந்து’ விடம் கூறியதாவது :

சந்திரபுரம் கிராமம்

வேலூர் மாவட்டம், திருப்பத்தூரிலிருந்து 10 கி.மீ., தொலைவில் உள்ள சந்திரபுரம் கிராமத்தில் கள ஆய்வு மேற்கொண்டதில் தொல்லியல் அடையாளங்களுடன் கூடிய கிராமம் என்பது தெரியவந்தது.

இந்த கிராமத்தில் 1,500 மீட்டர் உயரமுள்ள மலையில், கி. பி. 13-ம் நூற்றாண்டு விஜய நகர பேரரசர்கள் காலத்தில் கட்டப்பட்ட கோயில், கோட்டைச் சுவர், ரிஷிகள் வாழ்ந்த குகையும் அதில் கன்னட எழுத்துகளும் பொறிக்கப்பட்டுள்ளன.

மலையடிவாரத்தில் குகைக்கு செல்ல வழி அடையாளமாய் கன்னட எழுத்துகள் ஆங்காங்கே பொறிக்கப்பட்டுள்ளன. இதுதவிர கிணறும், உரல் போன்றவையும் இந்த குகையின் அருகே உள்ளது. இவை, மழைக் காலங்களில் நனையாமல் இருக்க மண்ணால் ஆன சுவர் கட்டப்பட்டுள்ளது.

சிதையாத சுவர்

பல நூற்றாண்டுகள் கடந்தும் இச்சுவர் இன்றும் சிதைவடையாமல் இருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. மலையடிவாரத்தில் உள்ள கோட்டைக் கிணறு என்று அழைக்கப்படும் பழங்கால கிணறு ஒன்று உள்ளது.

கடும் வறட்சியில் கூட இந்த கிணறு வற்றாமல் இருப்பதாக இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதன் அருகாமையில் உள்ள பெருமாள் கோயில் முன்பு குத்துக்கல் ஒன்று உள்ளது. மலைக்கு அருகேயுள்ளதாலும், ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருப்பதாலும் உயிரிழந்தவர்களுக்காக இந்த குத்துக்கல் அமைக்கப்பட்டிருக்கலாம்.

இக்கல்லானது 1.40 செ.மீ., உயரமும், 42 செ.மீ., அகலமும் கொண்டதாக உள்ளது.

சந்திரபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட வீரமுஷ்டிப்பள்ளி அருகே விருபாட்சிபுரம் என்ற இடத்தில் கி.பி. 13 மற்றும் 14-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சிவன் கோயில் சிதைந்த நிலையில் காணப்படுகிறது. முக மண்டபம், கருவறை ஆகியவை அமைந்துள்ளன.

தூண்களில் சிங்கம், நாட்டிய மங்கை, காமதேனு சிவ பெருமானை வழிபடுதல், கிருஷ்ணன், பிச்சாண்டவர் போன்றவை காணப்படுவதால், இவை அனைத்தும் விஜய நகர பேரரசர்கள் காலத்தில் கட்டிய கலைப் பணிகளாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x