Published : 12 Oct 2017 02:58 PM
Last Updated : 12 Oct 2017 02:58 PM

ஓபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் கோரும் திமுக வழக்கு: அக்.27-க்கு தள்ளிவைப்பு

கெறாடா உத்தரவை மீறி வாக்களித்த ஓ.பன்னீர்செல்வம் உட்பட 11 சட்டமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க திமுக தொடர்ந்த வழக்கு விசாரணையில் சட்டப்பேரவை செயலர், 11 எம்.எல்.ஏக்கள் அவகாசம் கேட்டதையடுத்து விசாரணையை அக்.27-க்கு உயர் நீதிமன்றம் தள்ளி வைத்தது.

எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் போது, அரசு கொறடா உத்தரவுக்கு எதிராக வாக்களித்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், செம்மலை, க.பாண்டியராஜன் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ. க்களை தகுதி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கக் கோரி தாக்கல் செய்த மனுவுக்கு சபாநாயகர், சட்டசபைச் செயலாளர் ஆகியோர் வரும் 27 ஆம் தேதிக்குள் பதில் அளிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

தமிழக சட்டமன்ற எதிர்கட்சியான திமுகவின் கொறடா சக்கரபாணி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ' கடந்த பிப்ரவரி மாதம் தமிழக சட்டமன்றத்தில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு தன் மீது நம்பிக்கை தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொண்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ. க்கள் 12 பேர் அரசு கொறடா உத்தரவை மீறி வாக்களித்து உள்ளனர்.

அரசு கொறடா உத்தரவுக்கு எதிராக நடந்து கொண்ட ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 12 எம்.எல்.ஏ. க்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் முருகுமாறன், தங்க தமிழ்ச்செல்வன், வெற்றிவேல், பார்த்திபன் ஆகியோர் சபாநாயகரிடம் மனு கொடுத்தனர். ஆனால், அதன் மீது சபாநாயகர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஆகவே, அரசு கொறடா உத்தரவுக்கு எதிராக நடந்து கொண்ட 12 எம்.எல்.ஏ. க்கள் மீது தமிழக சட்டமன்ற விதிகள் 1986 ல் கூறப்பட்டுள்ள தகுதி நீக்கம் தொடர்பான பிரிவுப்படி, நடவடிக்கை எடுக்கும்படி, சபாநாயகர், சட்டமன்ற செயலாளர் ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும் ' என்று கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி ரவிச்சந்திரபாபு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சட்டப்பேரவை செயலாளர் சார்பில் ஆஜரான தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன் தங்களின் தரப்பு பதில் அளிக்க மூன்று வாரங்கள் தேவை எனவே விசாரணை நவம்பர் மாதம் 2 ஆம் தேதிக்கு தள்ளிவைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இதற்கு திமுக சார்பில் ஆஜரான முத்த வழக்கறிஞர் கபில் சிபல் எதிர்ப்பு தெரிவித்தார். ஏற்கெனவே பதில் அளிக்க உத்தரவிடபட்டுள்ளது. எனவே விரைவாக பதில் அளிக்க உத்தரவிட வேண்டும் என கூறினார்.

பின்னர் உத்தரவிட்ட நீதிபதி இந்த மனு குறித்து பதில் அளிக்கும்படி சபாநாயகர், சட்டசபைச் செயலாளர் ஆகியோருக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார். அவர்கள் தங்கள் பதில் மனுவை அக்டோபர் 27 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி வழக்கின் விசாரணையை அன்றைய தேதிக்கு அக்.27-க்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் ஓபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏக்களும் இணைந்துள்ளனர். அவர்களும் அக்.27-க்குள் பதில் மனு தாக்கல் செய்ய உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x