Published : 12 Oct 2017 11:43 AM
Last Updated : 12 Oct 2017 11:43 AM

மதுரை அரசு மருத்துவமனை முன் காய்ச்சல் பாதித்த மகனுடன் சாலையில் அமர்ந்து தந்தை போராட்டம்: சிகிச்சை அளிக்க தாமதம் செய்ததால் அதிருப்தி

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க தாமதம் செய்ததால், காய்ச்சல் பாதித்த மகனுடன் தந்தை ஒருவர், மருத்துவமனை முன் சாலை மறியலில் ஈடுபட்டார்.

மதுரை நெல்பேட்டையைச் சேர்ந்தவர் நசுருதீன். இவரது மகன் அல் அமான். இவருக்கு கடந்த சில நாளாக காய்ச்சல் இருந்துள்ளது. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் குணம் அடையாததால் நேற்று காலை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு மகனுடன் வந்துள்ளார். அல் அமானை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு ஸ்கேன் எடுக்க சொல்லியுள்ளனர். மருத்துவமனை வளாகத்தில் ஸ்கேன் எடுக்க நீண்ட தூரம் செல்ல வேண்டி இருந்ததால் மருத்துவமனை பணியாளர்களிடம் மூன்று சக்கர நாற்காலி கேட்டுள்ளார். ஆனால், அவர்கள் நாற்காலி கொடுக்காமல் தாமதித்துள்ளனர்.

அதற்குள் அவரது மகன் மயக்க நிலையில் உடல் சோர்ந்துபோய் உள்ளார். அதிருப்தி அடைந்த நசுருதீன் மகனை தூக்கிக் கொண்டு மருத்துவமனை முன் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். அதனால், அப்பகுதியில் போக்குவரத்து தடைபட்டது. போலீஸார் நசுருதீனை சமாதானம் செய்து, சக்கர நாற்காலியை ஏற்பாடு செய்தனர். இதைத் தொடர்ந்து மகனை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்குள் சென்றார். சிகிச்சை அளிக்க தாமதம் செய்ததால், மகனுடன் தந்தை சாலையில் போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x