Published : 10 Oct 2017 06:12 AM
Last Updated : 10 Oct 2017 06:12 AM
அதிமுக எம்எல்ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை முதல்வர் கே.பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு நீடிக்கும் என திமுக செயல் தலை வர் மு.க.ஸ்டாலின் தெரிவித் துள்ளார்.
இதுதொடர்பாக திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது: அதிமுக எம்எல்ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கு வரும் 2-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விளக்கம் அளிக்க முதல்வர் கே.பழனிசாமி தரப்பு கால அவகாசம் கேட்டதே இதற்குக் காரணம்.
காலம் தாழ்ந்து கிடைத்தாலும் நீதி நிச்சயம் வெல்லும் என்ற நம்பிக்கை எங்களுக்கு மட்டுமல்ல தமிழக மக்களுக்கும் இருக்கிறது. இந்த கால தாமதம் குதிரை பேரத்துக்கு மட்டுமல்ல, கொள்ளையடிப்பதற்கும் வழி வகுக்கும். நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை இந்த ஆட்சி நீடிக்கும்.
கீழடியில் அகழாய்வுப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது. இதற்கு மத்திய, மாநில அரசுகளே காரணம். திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட கெயில் திட்டத்தை எதிர்த்துப் போராடுவோம் என்று இப்போது திமுக அறிவிப்பது முரண்பாடானது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார். அவர் எப்போதுமே முரண்பாடாகத்தான் எல்லாவற்றையும் சொல்லி வருகிறார்.
விவசாயிகளையும், விவசாய நிலங்களையும் பாதிக்கும் வகையில் செயல்படுத்தப்படும் கெயில் உள்ளிட்ட எந்தவொரு திட்டத்தையும் திமுக எதிர்க்கும். இதனை திமுக தலைவர் கருணாநிதி ஏற்கனவே குறிப்பிட்டுள்ளார். விவசாய நிலங்கள் வழியாக குழாய்களைக் கொண்டு வரும் திட்டத்தை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதே எங்களுடைய கோரிக்கை. டெங்குவை விட கொடியது திமுக என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியிருக்கிறார். இந்த ஆட்சியே ஒரு டெங்கு ஆட்சிதான்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT