Published : 07 Oct 2017 01:36 PM
Last Updated : 07 Oct 2017 01:36 PM
ம.நடராஜன் உடல்நிலை விரைவாகத் தேறிவருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அதிமுக அம்மா அணி பொதுச் செயலாளர் சசிகலாவின் கணவர் ம.நடராஜன் (74). இவர் உடல் நலக்குறைவால் கடந்த செப்டம்பர் மாதம் 10-ம் தேதி சென்னை, பெரும்பாக்கத்தில் உள்ள குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கல்லீரல் மற்றும் சிறுநீரகம் செயல் இழந்த நிலையில் அவர் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவருக்கு அக்டோபர் 4-ம் தேதி கல்லீரல் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து அவரின் உடல்நிலை விரைவாகத் தேறிவருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மருத்துவமனையின் கல்லீரல் நோய் மாற்று அறுவை சிகிச்சை நிறுவன இயக்குநர் கே.இளங்குமரன் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், ''நடராஜன் தற்போது கல்லீரல் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் விரைவாக உடல்நலம் தேறி வருகிறார்.
சுய நினைவுடன் இருக்கும் நடராஜனுக்கு ட்ரக்கியாஸ்டமி மூலம் சுவாசம் அளிக்கப்படுகிறது. இந்த சிகிச்சை வெள்ளிக்கிழமை அன்று மேற்கொள்ளப்பட்டது. தற்போது அவர் தீவிர சிகிச்சை மற்றும் கண்காணிப்பின் கீழ் இருக்கிறார்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலா தன் கணவரைச் சந்திக்க 5 நாள் பரோலில் சென்னை வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT