Published : 05 Oct 2017 03:41 PM
Last Updated : 05 Oct 2017 03:41 PM

ஜெயலலிதா கைரேகை சர்ச்சை டாக்டரை பதவி நீக்கக் கோரும் வழக்கு: அக்.9-ல் உத்தரவு

ஜெயலலிதாவின் கைரேகை குறித்து சான்றளித்த மருத்துவர் பாலாஜியை, தமிழ்நாடு உடல் உறுப்பு மாற்று ஆணைய உறுப்பினர் செயலராக நியமித்ததை எதிர்த்து பாடம் நாராயணன் தொடர்ந்த வழக்கு குறித்த உத்தரவு வரும் 9-ம் தேதி வழங்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

முதல்வர் ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தேர்தல் முறைகேடு காரணமாக நிறுத்தப்பட்ட அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதி மற்றும் உறுப்பினர் உயிரிழந்த திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு ஒத்தி வைக்கப்பட்டிருந்த தேர்தல், ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த நேரத்தில் நடந்தது.

ஜெயலலிதாவை யாரும் பார்க்க இயலாத நேரத்தில் தேர்தல் ஆணையத்துக்கு வழங்கிய ஒரு படிவத்தில் ஜெயலலிதா கையெழுத்தும் மற்றொரு படிவத்தில் விரல் ரேகையும் வைக்கப்பட்டிருந்தது. அது ஜெயலலிதாவின் விரல் ரேகைதான் என்று மருத்துவர் பாலாஜி சான்றளித்திருந்தார்.

அவர் சான்றளித்த சில நாட்களில் தமிழ்நாடு உடல் உறுப்பு மாற்று ஆணைய உறுப்பினர் செயலராக நியமிக்கப்பட்டார். அவரது நியமனத்தை ரத்து செய்யக் கோரி மாற்றம் இந்தியா அமைப்பு இயக்குனர் பாடம் நாராயணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஏற்கனவே உறுப்பினர் செயலராக இருந்த அமலோர்பவ நாதனை நீக்கிவிட்டு, பாலாஜியை நியமித்துள்ளதாகவும், மூத்த மருத்துவர்கள் பலர் இருக்க விதி முறைகளை மீறி ஜூனியரான டாக்டர் பாலாஜி நியமிக்கப்பட்டதாகவும் வாதிடப்பட்டது. அதேபோல ஆணைய செயற்குழு மற்றும் பொதுக் குழு உறுப்பினர்களின் ஒப்புதல் இல்லாமல் பாலாஜியை நியமித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனவும் வாதிடப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த மனு மீதான உத்தரவை நேற்று பிறப்பிப்பதாக தெரிவித்திருந்தனர்.

ஆனால் திடீரென அக்டோபர் 9 ஆம் தேதி தீர்ப்பை அறிவிப்பதாக தெரிவித்துள்ளனர். வரும் 9-ம் தேதி வழங்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x