Published : 04 Oct 2017 12:52 PM
Last Updated : 04 Oct 2017 12:52 PM

ஓபிஎஸ் உள்ளிட்ட 12 பேர் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?- 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் உயர் நீதிமன்றத்தில் கடும் வாதம்

18 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்றத்தில் கடும் வாதங்கள் வைக்கப்படுகிறது. 18 எம்.எல்.ஏக்களை நீக்கும் போது ஓபிஎஸ் உள்ளிட்ட 12 பேர் மீது ஏன் நடவடிக்கை இல்லை என டிடிவி தரப்பு வழக்கறிஞர் வாதம் வைத்துள்ளார். இரு தரப்பிலும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் வாதங்களால் விசாரணை பரபரப்பாக செல்கிறது.

அதிமுக ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் இணைந்ததை அடுத்து தனி அணியாக இயங்கி வரும் தினகரன் அணியினர் கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதி முதல்வர் மீது நம்பிக்கையில்லை என்று ஆளுநரிடம் கடிதம் அளித்தனர். இதையடுத்து டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களான தங்க தமிழ்செல்வன், வெற்றிவேல் உள்ளிட்ட 19 எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க சட்டப்பேரவைத் தலைவருக்கு அரசு கொறடா பரிந்துரை செய்த அன்றே 19 எம்எல்ஏக்களுக்கும் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டு, 3 வாரத்துக்குள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.

இதை எதிர்த்து தினகரன் தரப்பு தொடர்ந்த வழக்கில் 18 எம்.எல்.ஏக்கள் தொகுதிகள் காலி என அறிவிக்கக்கூடாது, சட்டப்பேரவையை கூட்டக்கூடாது என்ற உத்தரவுடன் முதலமைச்சர், சட்டப்பேரவைச்செயலர், கொறடா பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் அபிஷேக் சிங்வி டிடிவி தினகரன் தரப்புக்கும், முகுல் ரோத்தகி , சோமையாஜி ஆகியோர் அரசு தரப்புக்கும் ஆதரவாக வாதாடி வருகின்றனர். வழக்கில் முதலில் சட்டப்பேரவை தலைவர் தரப்பில் பதிலளிக்கப்பட்டது.

அந்த பதில் மனுவில்

"18 எம்.எல்.ஏக்களும் விளக்கமளிக்க உரிய அவகாசம் வழங்கப்பட்டது. தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களும் ஆட்சியை கவிழ்க்க சதித்திட்டம் தீட்டினர். பழனிசாமி - பன்னீர்செல்வம் இணைந்த தினத்தன்றே தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் சதித்திட்டம் தீட்டினர். ஆட்சியை கவிழ்ப்பேன் என்று தினகரன் மற்றும் தங்க தமிழ்செல்வன், வெற்றிவேல் ஆகியோர் வெளிப்படையாக பேசியதற்கான அதாரங்கள் உள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிடிவி தரப்பு வாதம்:

18 எம்.எல்.ஏ சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி ஆஜராகி வாதிட்டுவருகிறார். 18 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டது தவறானது என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் கொறடா உத்தரவை மீறி பிப்ரவரியில் வாக்களித்த ஓபிஎஸ் அணியினர் 12 பேர் பதவியை பறிக்கவில்லை என அபிஷேக் சிங்வி தெரிவித்தார்.

தகுதி நீக்கத்துக்கான உத்தரவு வழங்குவதிலேயே முறையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எங்களுக்கு நோட்டீஸ் வழங்குவதற்கு முன்னதாகவே ஊடகங்களுக்கு வழங்கினர். ஆட்சிக்கு எதிராக 18 எம்.எல்.ஏக்கள் செயல்படவில்லை. முதலமைச்சர் மீது தான் நம்பிக்கை இல்லை என்று தெரிவித்துள்ளோம்.

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் நடவடிக்கையை எடுத்த சட்டப்பேரவை தலைவர் 12 எம்.எல்.ஏக்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கேள்வியை எழுப்பினார்.

இந்த வழக்கில் முதலமைச்சர் தரப்பில் புகழ்பெற்ற வழக்கறிஞர் சோமையாஜி ஆஜராகி உள்ளார். அவர் தரப்பு வாதம் இன்னும் வைக்கப்படவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x