Published : 02 Oct 2017 11:57 AM
Last Updated : 02 Oct 2017 11:57 AM

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டிருப்பது ஏற்புடையதல்ல: வாசன்

பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரி விதிப்பு, பெட்ரோல், டீசல் விலையில் நாள்தோறும் மாற்றம் போன்றவற்றால் பொது மக்கள் பாதிக்கப்பட்டு வரும் சமயத்தில் தற்போது சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டிருப்பதும் ஏற்புடையதல்ல என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய பாஜக அரசு பொது மக்களுக்கு சேவை செய்ய வேண்டுமே தவிர சுமையை ஏற்றும் விதமாக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதை மக்கள் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். குறிப்பாக மத்திய பாஜக அரசு பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு அளித்த அனுமதியால் அந்த நிறுவனங்கள் தங்கள் லாபத்தை மட்டும் கணக்கில் கொண்டு செயல்பட்டு வருகிறது. அதாவது மானியத்துடன் கூடிய சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் போன்றவற்றின் விலையை அவ்வப்போது திடீரென்று உயர்த்தி வருகிறது.

நம் நாட்டில் சுமார் 18 கோடியே 11 லட்சம் வாடிக்கையாளர்கள் மானியத்துடன் கூடிய சமையல் எரிவாயு சிலிண்டரை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் மானியத்துடன் கூடிய ஒரு சமையல் எரிவாயு விலையானது சுமார் ரூ.2.30 அளவிற்கு உயர்த்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து செப்டம்பர் மாதம் திடீரென்று ஒரே சமயம் 7 ரூபாயும், தற்போது இந்த மாதம் (அக்டோபர்) மானியம் மற்றும் மானியம் இல்லாத ஒரு சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் மதிப்பு கூட்டு வரி நீங்கலாக ரூ.1.50 பைசாவும் உயர்த்தப்பட்டுள்ளது. இது கண்டிக்கத்தக்கது. இந்த விலை உயர்வை எண்ணெய் நிறுவனங்கள் திரும்ப பெறுவதற்காக மத்திய பாஜக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மாதம் தோறும் மானியத்துடன் கூடிய சிலிண்டர் விலையை உயர்த்தினால் அது சாதாரண ஏழை, எளிய, நடுத்தர குடும்பத்தைத்தான் பெருமளவு பாதிக்கும். சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயருகின்ற போது விலைவாசி ஏறி, அந்த விலைவாசி ஏற்றம் பொது மக்கள் மீது திணிக்கப்படும். ஏற்கெனவே பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரி விதிப்பு, பெட்ரோல், டீசல் விலையில் நாள்தோறும் மாற்றம் போன்றவற்றால் பொது மக்கள் பாதிக்கப்பட்டு வரும் சமயத்தில் தற்போது சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டிருப்பதும் ஏற்புடையதல்ல.

மத்திய பாஜக அரசு இதனை ஏன் கண்டுகொள்ளவில்லை என்பது மக்கள் விரோதப்போக்கையே எடுத்துக்காட்டுகிறது. அதிலும் குறிப்பாக மக்களுக்கான திட்டங்களில் ஏற்கெனவே நடைமுறையில் உள்ள மானியத்தை குறைக்கவோ, நீக்கவோ இது போன்ற விலையேற்றத்தை கொண்டுவர முயற்சிக்க கூடாது.

எனவே மத்திய பாஜக அரசு முதலில் எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கிய அனுமதியை திரும்பப் பெற வேண்டும். மேலும் மத்திய அரசே பெட்ரோலியப் பொருட்களின் விலையை நாள்தோறும், மாதம் தோறும் என அவ்வப்போது ஏற்றாமல் ஒரு நிலைத்த கொள்கையைப் பின்பற்ற வேண்டும். அதாவது மானியத்துடன் கூடிய பொருட்களை தொடர்ந்து மானியத்துடனேயே வழங்க வேண்டும்.

எக்காரணத்திற்காகவும் மக்கள் மீது சுமையை ஏற்றும் விதமான நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபடாமல் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு ஆட்சி செய்ய வேண்டும்'' என்று வாசன் தெரிவித்துள்ளார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x