Published : 27 Sep 2017 08:31 AM
Last Updated : 27 Sep 2017 08:31 AM
ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணையை விரைவாக முடிக்க வேண்டும் என்று டிடிவி.தினகரன் ஆதரவு எம்எல்ஏவான வெற்றிவேல் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து சென்னையில் நேற்று வெற்றிவேல் நிருபர்களிடம் கூறியதாவது:
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து அமைச்சர்கள் மாறுபட்ட கருத்துகளை கூறி வருகின்றனர். விசாரணை கமிஷனின் அறிக்கையில் எல்லாம் வெளியே வரும். முதல்வருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களின் அறிக்கையை மறுக்கவோ, மறைக்கவோ முடியாது.விசாரணைக் கமிஷன் தனது விசாரணையை குறிப்பிட்ட கால வரையறைக்குள் விரைவாக முடிக்க வேண்டும்.
அக்டோபர் 4-ம் தேதி வரவுள்ள நீதிமன்றத் தீர்ப்புக்காக காத்திருக்கிறோம். எல்லாவற்றையும் நீதிமன்றம் மூலமாக எதிர்கொள்வோம். நீதிமன்றத் தீர்ப்புக்கு பிறகு குடகு விடுதியில் தங்கியிருக்கும் எம்எல்ஏக்கள் வருவார்கள். பழனியப்பன், செந்தில் பாலாஜி ஆகியோர் மீது இந்த அரசு பொய் வழக்கு போட்டுள்ளது.
ஆதாரங்களை சமர்பிப்போம்
எங்கள் திருச்சி பொதுக்கூட்டம் ஆட்சியாளர்களை கலங்க வைத்திருக்கிறது. இதனை திசை திருப்ப வேண்டும் என்பதற்காக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மூலமாக ஒரு ஆண்டுக்குப் பிறகு ஒரு பிரச்சினையை கிளப்பிவிட்டுள்ளனர். விசாரணை கமிஷன் விசாரணையின்போது எங்களிடம் உள்ள வீடியோ ஆதாரங்களை சமர்பிப்போம்.
முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் என்பதால் தீபக் மீது நல்ல அபிப்ராயம் உள்ளது. அதைத்தவிர அவருடன் எங்களுக்கு எந்த உறவும் கிடையாது. அவருக்கு அரசியலுக்கு வர வேண்டும் என்ற எண்ணம் இருக்கலாம். அதனால்கூட முன்னுக்குப் பின் முரணான கருத்துகளை கூறியிருக்கலாம். சசிகலாவைப் பற்றியும் அவர் குறை சொல்லியிருக்கிறார். முதல்வர் ஜெயலலிதா தீபக்கை ஒருபோதும் முன்னிலைப் படுத்தியதில்லை.
இவ்வாறு வெற்றிவேல் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT