Published : 25 Sep 2017 02:31 PM
Last Updated : 25 Sep 2017 02:31 PM

ஜெ. வீடியோ ஆதாரத்தை பொதுவெளியில் வெளியிடாதது ஏன்?- தினகரன் விளக்கம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் இருந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ ஆதாரங்களை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடாதது ஏன் என்பது குறித்து அதிமுக அம்மா அணியின் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விளக்கமளித்துள்ளார்.

ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது அவர் வார்டுக்கு கொண்டு வரப்பட்ட பின்னர், ஜெயலலிதா சாதாரணமாக டிவி பார்க்கும் காட்சிகளை சசிகலா வீடியோவாக எடுத்த காட்சிகள் தங்களிடம் உள்ளதாகவும் நீதிமன்ற விசாரணையில் வெளியிடுவோம் என்றும் தினகரன் தெரிவித்தார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தினகரனிடம் 75 நாட்கள் ஜெயலலிதா சிகிச்சையில் நடந்தது பற்றி தனக்கு தெரியாது என்று திண்டுக்கல் சீனிவாசன் பேசியுள்ளது பற்றி கேட்டபோது அவர் கூறியதாவது:

இட்லி சாப்பிட்டது பற்றி அன்று இவரை யார் பேசச்சொன்னது. அன்று நடந்தது பொய் என்று திண்டுக்கல் சீனிவாசன் கூறுவதை வாதத்துக்கு வைத்துக்கொண்டால் இன்று அவர் பேசுவது உண்மையா என்ற கேள்வியையும் வைக்கலாமே. இன்று அமைச்சர் பதவியை காப்பாற்றிக்கொள்ள ஏன் அவர் பொய் பேசக்கூடாது.

ஜெயலலிதாவை செப்.22 அனுமதித்தது முதல் அவரை பார்த்துக்கொண்டது தமிழக அரசின் மருத்துவக்குழுவும், அப்போலோ மருத்துவர்களும்தான், எனது சித்தி சசிகலாவை கூட அனுமதிக்கவில்லை. காரணம் தொற்று ஏற்பட்டு விடுமோ என்ற பயம் தான். எப்போதாவது அழைத்தால் பார்க்க அனுமதிக்கப்பட்டார்.

ஆனால் வார்டுக்கு மாற்றிய பிறகு ஜெயலலிதாவுடன் தான் எங்கள் சித்தி சசிகலா இருந்தார். அப்போது ஜெயலலிதா சாதாரணமாக இருந்தார். நைட்டியுடன் அவர் டிவி பார்ப்பதை என் சித்தி வீடியோவாக எடுத்தார்.

அந்த வீடியோவை வெளியிட சித்தி அனுமதிக்கவில்லை. காரணம் ஜெயலலிதாவை போயஸ் கார்டனிலிருந்த நாங்கள் கூட நைட்டியில் பார்த்ததில்லை. அந்த அளவுக்கு அவர் தன்னைப்பற்றிய ஒரு பிம்பத்தை பராமரித்தார்.

அப்படிப்பட்டவரை நைட்டியில் எடுத்த வீடியோ காட்சிகளை வெளியிட சித்தி அனுமதிக்கவில்லை. எங்களைப்பற்றி குற்றம் சொன்னபோதும் நாங்கள் வெளியிடாததற்கு இதுவே காரணம்.

ஆனால் நீதி விசாரணையின் போது அந்த வீடியோவை சமர்ப்பிப்போம். மக்கள் முன்பு அல்ல விசாரணை ஆணையத்திடம் அளிப்போம். நீதி விசாரணைக்கு ஓய்வு பெற்ற நீதிபதி அல்லது பணியில் இருக்கும் மூத்த நீதிபதியை நியமித்து விசாரணை நடத்த வேண்டும். மடியில் கனமில்லை அதனால் எங்களுக்கும் வழியிலும் பயமில்லை.

இவ்வாறு தினகரன் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x