Published : 18 Sep 2017 03:44 PM
Last Updated : 18 Sep 2017 03:44 PM

எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க விவகாரம்: எடியூரப்பா வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு என்ன?

அதிமுக அணியில் தனி அணியாக செயல்படும் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கொறடா பரிந்துரையை ஏற்று சட்டப்பேரவை தலைவர் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

ஆனால் இந்தத் தகுதி நீக்கம் உயர், உச்ச நீதிமன்றங்களுக்குச் சென்றால் செல்லுபடியாகுமா என்பது கேள்விக்குறியே. காரணம் 2010-ம் ஆண்டு கர்நாடக முதல்வர் எடியூரப்பா மீது இதே நம்பிக்கை வாக்கெடுப்பு பிரச்சினை எழுப்பப்பட்ட போது கர்நாடக சட்டப்பேரவைக் கொறடாவும் இதே போல் 16 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்தார், ஆனால் இந்தத் தகுதி நீக்கம் செல்லுபடியானதா என்றால் ஆகவில்லை என்றுதான் கூற வேண்டும்.

2010-ம் ஆண்டு கர்நாடக முதல்வராக இருந்த எடியூரப்பா பதவி வகித்தபோது 11 பாஜக எம்.எல்.ஏ.க்களும் 5 சுயேச்சை எம்.எல்.ஏ.க்களும் எடியூரப்பாவுக்குக் கொடுத்த ஆதரவை வாபஸ் வாங்கினர்.

இதையடுத்து கர்நாடக சபாநாயகரால் இவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். பிறகு 16 எம்.எல்.ஏ.க்களும் தகுதியிழப்புச் செய்யப்பட்டனர். இந்த வழக்கு கர்நாடக உயர் நீதிமன்றத்துக்கு வந்த போது உயர் நீதிமன்றம் தகுதி நீக்கத்தை உறுதி செய்து அக்டோபர் 29, 2010-ல் தீர்ப்பளித்தது.

இதனையடுத்து 16 எம்.எல்.ஏ.க்களும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கின் தீர்ப்பு 2011-ம் ஆண்டு மே மாதம் 13-ம் தேதி அளிக்கப்பட்டது.

அதில், எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் பற்றிய சபாநாயகரின் முடிவுக்கு சந்தேகமின்றி தடை விதிக்க வேண்டியதுதான். இந்த வழக்கின் பலதரப்பட்ட விவகாரங்களையும், பல்வேறு கேள்விகளையும் ஆய்ந்தும் பரிசீலித்தும் பார்க்கும் போது அரசியல் சாசனத்தின் அடிப்படை மதிப்பீடுகள், இயற்கை நீதி ஆகியவற்றை பொருட்படுத்தாமல் சபாநாயகர் எடுத்த நடவடிக்கையை ஏற்றுக் கொள்ள இந்த நீதிமன்றம் மறுக்கிறது என்று கூறி அவர் உத்தரவு செல்லாது என்று தீர்ப்ப்பளித்தது.

அதாவது சபாநாயகர் இந்த விவகாரத்தில் ஆளுநர் விதித்த இறுதிக்கெடுவை சந்திக்க வேண்டும் என்பது போல் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார், இந்த நடைமுறையில் அரசியல் சாசன அடிப்படைகள், 1986-ம் ஆண்டு தகுதிநீக்க விதிகள் ஆகியவை புறக்கணிக்கப்பட்டன.

அதாவது நம்பிக்கை வாக்கெடுப்பு முதல்வருக்கு விரோதமாகப் போய்விடக்கூடாது என்பதற்காகவே சபாநாயகர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார் என்பதைத் தவிர புரிந்து கொள்ளக் கூடிய தர்க்கபூர்வ காரணங்கள் இந்த தகுதி நீக்கத்துக்குப் பின்னால் இல்லை, என்று உச்ச நீதிமன்றம் கண்டித்து தகுதிநீக்க உத்தரவை ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x