Last Updated : 15 Sep, 2017 12:36 PM

 

Published : 15 Sep 2017 12:36 PM
Last Updated : 15 Sep 2017 12:36 PM

இரட்டை இலை சின்னம் யாருக்கு?- தேர்தல் ஆணையம் அக்.31க்குள் இறுதி முடிவெடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது குறித்து தேர்தல் ஆணையம் அக்.31க்குள் இறுதி முடிவெடுக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், ''அதிமுகவின் அதிகாரபூர்வ சின்னமாக 45 ஆண்டுகளாக இருந்து வரும் இரட்டை இலையை அக்கட்சியில் ஏற்பட்டுள்ள பிளவு காரணமாக தேர்தல் ஆணையம் முடக்கியது. அதிமுக நிர்வாகக் குழு தேர்தல் நடத்தி அதில் வெற்றி பெறும் அணியிடம் இரட்டை இலை சின்னத்தை ஒப்படைக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்'' என மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

உள்ளாட்சித் தேர்தல் வர உள்ள நிலையில் விரைவில் தீர்வு காண வேண்டும். இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது குறித்து தேர்தல் ஆணையம் அக்.31க்குள் இறுதி முடிவெடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

இரு தரப்பிலும் கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்வதால் கால தாமதம் ஆகிறது என்று தேர்தல் ஆணையம் பதிலளித்தது.

இதனை ஏற்றுக்கொள்ளாத நீதிபதிகள், ''உத்தரப் பிரதேசத்தில் இது போன்ற சூழலில் அகிலேஷ் யாதவ் விவகாரத்தில் இறுதி முடிவு உடனே எடுக்கப்பட்டது. எனவே, கூடுதல் ஆவணங்களால் கால தாமதம் ஆகிறது என்பதைக் காரணமாக சொல்லாமல் ஆவணங்கள் தாக்கல் செய்ய இறுதி நாள் ஒன்றை நிர்ணயித்து அறிவிக்க வேண்டும். அதற்குப் பிறகு இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பதை தேர்தல் ஆணையம் அக்டோபர் 31-ம் தேதிக்குள் இறுதி முடிவெடுக்க வேண்டும்'' என்று உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x