Published : 14 Sep 2017 12:45 PM
Last Updated : 14 Sep 2017 12:45 PM

பெரும்பான்மையை நிரூபிக்கக்கோரி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் உயர் நீதிமன்றத்தில் முறையீடு

சென்னை

பெரும்பான்மையை நிரூபிக்கக்கோரி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், தற்போது அவர்கள் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் ஏற்கெனவே தொடர்ந்த வழக்கில் வாதம் நடைபெற்று வந்த நிலையில் டிடிவி தரப்பில் முறையீடு செய்யப்பட்டது.

பெரும்பான்மையை இழந்த அதிமுக அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ஆளுநர், தமிழக முதல்வருக்கு உத்தரவிட வேண்டும் என்று உத்தரவிடக் கோரி ஸ்டாலின் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு இன்று நீதிபதி எம்.துரைசாமி முன்பு விசாரணைக்கு வந்தது. அதில் ஸ்டாலின் தரப்பில் உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜரானார்.

இந்த வழக்கில் வாதம் நடந்துகொண்டிருந்தபோது டிடிவி தினகரன் சார்பில் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜரானார். நீதிபதியிடம் பேசிய அவர், தினகரன் தரப்பு எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்து குறுக்கு வழியில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த எடப்பாடி அரசு திட்டமுள்ளது. ஆனால் எங்கள் எம்எல்ஏக்களை அவ்வாறு தகுதி நீக்கம் செய்யமுடியாது. அதனால் எங்கள் தரப்பு வாதத்தையும் கேட்க வேண்டும் என்று முறையிட்டார்.

இதைக் கேட்ட நீதிபதி இதுதொடர்பாக டிடிவி அணியிடம் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி ஓபிஎஸ் அணியை இணைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், சசிகலா, தினகரனை கட்சிப் பொறுப்பிலிருந்து நீக்கும் முடிவை எதிர்த்தும் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேர் ஆளுநரை சந்தித்து முதல்வர் மீது நம்பிக்கை இல்லை, அவரை மாற்ற வேண்டும் என கடிதம் கொடுத்திருந்தனர்.

இந்நிலையில் தினகரன் அணி எம்எல்ஏக்களுக்கான கெடு இன்றுடன் முடிவடையும் சூழலில் பெரும்பான்மையை நிரூபிக்கக்கோரி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x