Published : 14 Sep 2017 08:30 AM
Last Updated : 14 Sep 2017 08:30 AM
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் பகுதியில் ஓஎன்ஜிசி நிறுவனம் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த தடை விதிக்கக் கோரி, வடகாடு, நெடுவாசல் பாசன விவசாயிகள் நலச் சங்கம் சார்பில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு, அமர்வின் நீதித்துறை உறுப்பினர் நீதிபதி எம்.எஸ்.நம்பியார் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பு வழக்கறிஞராக மதிமுக பொதுச்செயலர் வைகோ ஆஜரானார்.
அவர் வாதிடும்போது, ‘‘நெடுவாசல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்க மத்திய அரசு கர்நாடகத்தைச் சேர்ந்த ஜெம் லேபாரட்ரிக்கு உரிமம் வழங்கியுள்ளது. அதைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரியில் ஓஎன்ஜிசி நிறுவனமும், கர்நாடகத்தைச் சேர்ந்த ஜெம் லேபாரட்ரியும் நெடுவாசல் பகுதியில் இயந்திரங்களுடன் வந்து, ஆயத்த வேலைகளைத் தொடங்கினர். அதை எதிர்த்து அங்கு கடந்த 7 மாதங்களாக போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. எனவே, அத்திட்டம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்’’ என்றார்.
அதைத் தொடர்ந்து, தொழில்நுட்ப உறுப்பினர் முதல் அமர்வில் விசாரித்து வருவதால், 2-வது அமர்வில் மனுக்களை விசாரிக்க முடியாது. இந்த மனுவுக்கு ஓஎன்ஜிசியும், தமிழக அரசும் தங்கள் தரப்பு பதிலை 2 வாரத்துக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். மனு மீதான விசாரணை அக்டோபர் 11-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
பின்னர் நிருபர்களிடம் பேசிய வைகோ, ‘‘மத்திய அரசு திட்டமிட்டே, பசுமைத் தீர்ப்பாயத்தின் 2-வது அமர்வுக்கு தொழில்நுட்ப உறுப்பினரை நியமிக்காமல் இருந்து வருகிறது. பசுமைத் தீர்ப்பாயத்தை மூடிவிட்டு, பெருநிறுவனங்களுக்கு ஆதரவாக இருந்து, சுற்றுச்சூழலை மாசுபடுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT