Published : 13 Sep 2017 11:41 AM
Last Updated : 13 Sep 2017 11:41 AM

மதுரை அருகே வினோத திருவிழா: தெய்வமாக வழிபட 7 சிறுமிகள் தேர்வு

மதுரை அருகே அம்மன் தெய்வமாக வழிபடுவதற்காக 7 சிறுமிகள் பூசாரியால் தேர்வு செய்யப்பட்டனர்.

மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ளது வெள்ளலூர். இவ்வூரை தலைமையிடமாகக் கொண்ட 60 கிராமங்கள் வெள்ளலூர் நாடு என்றழைக்கப்படுகிறது.

இந்த ஊரில் உள்ள ஏழைகாத்த அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழா மிகப் பிரசித்தி பெற்றது. 15 நாள் திருவிழா நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று காலை ஏழைகாத்த அம்மன் கோயில் முன்பாக 60 கிராமத்தினரும் திரண்டனர். அம்மனாக வழிபடக்கூடிய 7 சிறுமிகளை தேர்வு செய்வதற்காக, நூற்றுக்கும் அதிகமான சிறுமிகள் பெற்றோருடன் காத்திருந்தனர். இவர்களில் 7 பேரை பூசாரி சின்னத்தம்பி தேர்வு செய்தார்.

இந்த சிறுமிகள் 15 நாட்களும் கோயிலிலேயே தங்கி இருப்பர். 60 கிராமத்தினரும் தினசரி சிறுமிகளிடம் ஆசி பெறுவர். 15-ம் நாளில் பெண்கள் மதுக்கலயம், சிலைகளுடனும், ஆண்கள் வைக்கோல் பிரி சுற்றியபடியும் 7 கி.மீ. நடந்து சென்று, தங்கள் நேர்த்திக் கடனை செலுத்துவர். இந்த ஊர்வலத்தில் 7 சிறுமிகளும் அம்மன் தெய்வங்களாக பங்கேற்பர்.

திருவிழா தொடங்கியது முதலே 60 கிராமத்தினரும் மாமிசம், தாளித்த உணவு உண்பதை தவிர்த்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள உணவகங்களிலும் இந்த முறையே கடைப்பிடிக்கப்படுகிறது. பச்சை மரங்களை வெட்டுதல், பூமியை தோண்டுதல், கட்டிடம் கட்டுவது போன்ற பல்வேறு பணிகளை விரத நாட்களில் கிராம மக்கள் மேற்கொள்வதில்லை. முன்னொரு காலத்தில் இங்கு கல் சிலைகளான 7 பெண் குழந்தைகளுக்கு அம்மன் உயிர் கொடுத்ததாக ஐதீகம். இதனால் அம்மன் காலப்போக்கில் ஏழைகாத்த அம்மன் என அழைக்கப்பட்டு வருகிறது.

குழந்தைகளை காத்த அம்மனுக்கு மரியாதை செலுத்தும் வகையில் இத்திருவிழா நடத்தப்படுகிறது. இக்கிராமங்களைச் சேர்ந்தோர் வெளியூர், வெளிநாடு என எங்கிருந்தாலும் திருவிழாவில் பங்கேற்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x