Published : 12 Sep 2017 11:31 AM
Last Updated : 12 Sep 2017 11:31 AM
அதிமுக பொதுக்குழுவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. முதல் தீர்மானமாக இரட்டை இலையை மீட்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டது செல்லாது என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. மொத்தம் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இரு அணிகள் இணைந்ததற்கு பாராட்டு தெரிவித்து ஒரே கட்சியாக இணைந்தது குறித்து பாராட்டியும் வாழ்த்தியும் தீர்மானம் வாசிக்கப்பட்டது.
முதல் தீர்மானமாக இரட்டை இலை சின்னத்தை மீட்க வேண்டும் என்ற தீர்மானத்தை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வாசித்தார். பின்னர் அது ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
அதிமுகவில் முதல்வர் பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் செயல்பட்டு வந்த 2 அணிகளும் கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதி இணைந்தன.
சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்குவது தொடர்பாக முடிவெடுக்கப்படும் என்று அப்போது அறிவித்தனர். இதையடுத்து, துணை முதல்வராக ஓபிஎஸ் பதவியேற்றார். இதற்கு தினகரன் தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். 21 எம்எல்ஏக்கள், முதல்வர் பழனிசாமிக்கான ஆதரவை வாபஸ் பெற்றனர்.
இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி அதிமுக நிர்வாகிகள் கூடி, பொதுக்குழுவை விரைவில் கூட்ட முடிவெடுத்தனர். செப்டம்பர் 12-ம் தேதி பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியானது.
அதன்படி, பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுகவின் பொதுக்குழு, செயற்குழுக் கூட்டம் இன்று (செப்.12) நடைபெற்று வருகிறது.
தீர்மானங்கள் விவரம்:
தீர்மானம் 1 - இரட்டை இலை சின்னத்தையும், அதிமுக என்ற கட்சிப் பெயரையும் தேர்தல் ஆணையத்தில் இருந்து மீட்பது.
தீர்மானம் 2 - ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டவர்கள் அதே பதவிகளில் தொடர்வார்கள்.
தீர்மானம் 3 - எம்ஜிஆர். நூற்றாண்டு விழாவை சிறப்பாக நடத்தி வருவதற்காக தமிழக அரசுக்கு பாராட்டு.
தீர்மானம் 4 - முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மணி மண்டபம் கட்ட ரூ.15 கோடி நிதி ஒதுக்கிய தமிழக அரசுக்கு நன்றி.
தீர்மானம் 5 - வர்தா புயல் மீட்பு பணிகளில் சிறப்பாக செயல்பட்ட, விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் அளித்த தமிழக அரசுக்கு நன்றி.
தீர்மானம் 6- நெருக்கடியான சூழலில் கட்சியை ஆட்சியை காப்பாற்றும் நிர்வாகிகளுக்கு பாராட்டு.
தீர்மானம் 7- அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா மட்டுமே.
தீர்மானம் 8 - தற்காலிக பொதுச் செயலாளராக சசிகலா நியமனம் செய்யப்பட்டது ரத்து. அவரது நியமனங்கள் ஏதும் செல்லாது.
தீர்மானம் 9 - கட்சிக் கட்டுப்பாட்டை சீர்குலைக்கும் வகையில் தினகரன் நியமிக்கும் நியமனங்கள் செல்லாது.
தீர்மானம் 10 - தொண்டர்கள் மனம் அறிந்து கட்சியை வழிநடத்த புதிய பதவி உருவாக்கப்படும்.
தீர்மானம் 11 - பொதுச்செயலாளர் வகித்துவந்த அதிகாரம் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்., இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ்.க்கு வழங்கப்படும்.
தீர்மானம் 12 - கட்சியின் சட்டவிதிமுறை விதி எண் 19 முதல் 40 வரை மாற்றம் செய்து திருத்தம் மேற்கொள்ள ஏகமனதாக ஒப்புதல்.
தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட பின்னர் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார். மதியம் 1.05 மணியளவில் பொதுக்குழு கூட்டம் நிறைவு பெற்றது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT