Published : 08 Sep 2017 11:26 AM
Last Updated : 08 Sep 2017 11:26 AM

கீழடி அகழாய்வு பகுதியை மூடக்கூடாது: மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவு

கீழடியில் அகழாய்வு நடைபெற்ற பகுதியை மூடாமல் பாதுகாக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த கனிமொழி மதி என்பவர் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த பொதுநலன் மனு:

மதுரையில் இருந்து 17 கி.மீ. தொலைவில் சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்ற அகழாய்வில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான 5,300 பழங்காலப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. இங்கு 110 ஏக்கர் அளவில் பழங்கால பொருட்கள், ஆவணங்கள் புதைந்துள்ளன. ஆனால் ஒரு ஏக்கர் பரப்பளவில் தான் ஆய்வுகள் நடைபெற்றுள்ளன. கீழடியில் அகழாய்வு பணியை தொடரவும், பழங்கால பொருட்களை கீழடியிலேயே அருங்காட்சியகம் அமைத்து காட்சிப்படுத்தவும் உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.

இதேபோல் கீழடியில் அகழாய்வு பணியை மேற்கொண்ட தொல்லியல் அதிகாரி இடமாறுதல் செய்யப்பட்டதற்கு எதிராகவும் கனிமொழி மதி தனி மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுக்கள் நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், சதீஷ்குமார் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், கீழடியில் அகழாய்வு நடைபெற்ற இடத்தை பாதுகாக்க வேண்டும். அகழாய்வு நடைபெற்ற இடத்தை மூடக்கூடாது. அகழாய்வுக்காக தோண்டப்பட்ட இடம் அப்படியே இருப்பது தான் சிறப்பு. ஹரப்பா, மொகஞ்சதாரோவில் அகழாய்வு நடைபெற்ற இடம் மூடப்படாமல் தான் உள்ளது. அகழாய்வு நடைபெற்று வரும் இடங்களை வைத்திருந்த தனியாருக்கு இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

அப்போது, நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த தொல்லியல் கண்காணிப்பாளர் ஸ்ரீராம் கூறுகையில், அகழாய்வு மேற்கொள்வதற்கு வழங்கப்பட்ட உரிமக் காலம் இந்த மாதத்துடன் முடிகிறது. உரிமக் காலத்தை நீட்டிக்க மத்திய அரசை கேட்டுள்ளோம். இங்கு கண்டுபிடிக்கப்பட்ட பழங்காலப் பொருட்களை பாதுகாப்பாக வைக்க பக்கத்திலுள்ள சமுதாயக் கூடத்தை தர அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றார்.

பின்னர் நீதிபதிகள் தங்கள் உத்தரவில், அகழாய்வு நடைபெற்ற இடத்துக்கு நிரந்தரமாக போலீஸ் பாதுகாப்பு வழங்குவது தொடர்பாகவும், பழங்காலப் பொருட்களை பாதுகாக்க சமுகநலக் கூட்டத்தை வழங்குவது தொடர்பாகவும் மாவட்ட நிர்வாகம் பதிலளிக்க வேண்டும். கொந்தகையில் அருங்காட்சியகம் அமைக்க அரசு வழங்கியுள்ள இடத்தை கூடுதல் அட்வகேட் ஜெனரல், மத்திய அரசு வழக்கறிஞர் பார்வையிட்டு அங்குள்ள வசதிகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர். விசாரணையை செப். 11-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x