Published : 07 Sep 2017 09:55 AM
Last Updated : 07 Sep 2017 09:55 AM

சிறிய நாடான இலங்கை முன்னோடியாகத் திகழ்கிறது: ஆராய்ச்சியில் இந்தியா பின்தங்கியுள்ளது - மத்திய ஆராய்ச்சித் துறை செயலாளர் கவலை

சிறிய நாடான இலங்கை ஆராய்ச்சியில் முன்னோடியாகத் திகழ்கிறது. ஆனால் இந்தியா ஆராய்ச்சியில் பின்தங்கியுள்ளது என்று மத்திய சுகாதார ஆராய்ச்சித் துறையின் செயலாளரும், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் (டெல்லி) தலைமை இயக்குநருமான சவுமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் 29-வது பட்டமளிப்பு விழா, சேப்பாக்கத்தில் உள்ள சென்னைப் பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழா அரங்கில் நேற்று நடந்தது. தமிழக ஆளுநரும், பல்கலைக்கழகத்தின் வேந்தருமான சி.எச்.வித்யாசாகர் ராவ் விழாவுக்குத் தலைமை தாங்கினார். சுகாதாரத் துறை அமைச்சரும், பல்கலைக்கழகத்தின் இணைவேந்தருமான சி.விஜயபாஸ்கர், செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், பல்கலைக்கழகத் துணைவேந்தர் எஸ்.கீதாலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மத்திய சுகாதார ஆராய்ச்சித் துறையின் செயலாளரும், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் (டெல்லி) தலைமை இயக்குநருமான சவுமியா சுவாமிநாதன் பட்டமளிப்பு விழா உரை நிகழ்த்தினார்.

73 சதவீதம் மாணவிகள்

இந்த பட்டமளிப்பு விழாவில் மருத்துவம், பல் மருத்துவம், ஆயுஷ் (ஆயுர்வேதா, யோகா மற்றும் இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா, ஹோமியோபதி), மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளைப் படித்தவர்களுக்கு நேரடியாக 2,925 பேருக்கும், மற்ற வகையில் 16,270 பேருக்கும் என மொத்தம் 19,195 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. இவர்களில் 27 சதவீதம் மாணவர்கள், 73 சதவீதம் மாணவிகள் என்பது குறிப்பிடத்தக்கது. 139 மாணவ, மாணவிகள் 81 தங்கம், 85 வெள்ளி என மொத்தம் 166 பதக்கங்களைப் பெற்றனர்.

சிஎம்சி மாணவி சாதனை

வேலூரில் உள்ள கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரியில் (சிஎம்சி) எம்எஸ் (பொது அறுவைச் சிகிச்சை) படித்த வி.நிவேதிதா ஷாமா 3 தங்கம், 2 வெள்ளி என மொத்தம் 5 பதக்கங்களைப் பெற்று சாதனை படைத்தார். சேலம் அன்னபூர்ணா மருத்துவக்கல்லூரி எம்பிபிஎஸ் படித்த எஸ்.கேதார கவுரி 4 தங்கப் பதக்கமும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் எம்டி (காசநோய் மற்றும் சுவாச மருத்துவம்) படித்த பி.ஆனந்தேஸ்வரி 3 தங்கப் பதக்கமும், கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரியில் எம்டி (மயக்கவியல்) படித்த தமலிகா தாஸ் 2 தங்கப் பதக்கமும் பெற்றனர். சென்னை மருத்துவக் கல்லூரியில் (எம்எம்சி) டிஎம் (இதய சிகிச்சை) படித்த ஜமுனா தேவி 2 தங்கப் பதக்கமும், எம்சிஎச் (ஒட்டுறுப்பு மற்றும் புனரமைப்பு அறுவை சிகிச்சை) படித்த ஸ்ரீலட்சுமி சுந்தரராஜன் 2 தங்கப் பதக்கமும் பெற்றனர்.

ஆய்வில் கவனம்

இந்த விழாவில் மத்திய சுகாதார ஆராய்ச்சித் துறையின் செயலாளரும், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் (டெல்லி) தலைமை இயக்குநருமான சவுமியா சுவாமிநாதன் பேசியதாவது: மருத்துவத் துறையில் தமிழகம் சிறந்து விளங்குகிறது. நாட்டின் அனைத்து மாநிலங்களும் மருத்துவத் துறையில் தமிழகத்தின் வளர்ச்சியை பார்த்துக் கொண்டிருக்கிறது. ஆனாலும் மருத்துவத் துறையில் தமிழகம் மிகவும் பின்தங்கியுள்ளது. இந்தியாவே ஒட்டுமொத்தமாக ஆராய்ச்சியில் பின்தங்கியுள்ளது. நம்மைவிட சிறிய நாடான இலங்கை ஆராய்ச்சியிலும், தரத்திலும் முன்னோடியாகத் திகழ்கிறது. சர்வேச அளவில் தீர்வுகளைக் கண்டறியும் வகையில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும். ஆராய்ச்சிக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள், மனிதவளம் போன்றவைகள் இருந்தும் ஆய்வில் கவனம் செலுத்தத் தயங்குகிறோம்.

ஒப்புயர்வு மையம்

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் 3 முதல் 6 மாதங்கள் வரையான குறுகிய ஆய்வுகளுக்கு நிதியுதவி அளித்து வருகிறது. இதற்கு ஆண்டுதோறும் சுமார் 10 ஆயிரம் பேர் விண்ணப்பிக்கின்றனர். அவற்றில் பெரும்பாலோனோர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். அவற்றில் ஆயிரம் பேருக்கு நிதியுதவி அளிக்கப்பட்டு வருகிறது. சர்வதேச அளவில் பயன்படும் வகையில் முதுநிலை மருத்துவம் மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகளைப் படிப்பவர்கள் ஆராய்ச்சிகளில் ஈடுபட வசதியாக நாடுமுழுவதிலும் இருந்து 20 மருத்துவக் கல்லூரிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒப்புயர்வு மையமாக தரம் உயர்த்தப்பட உள்ளது. அவற்றில் இரண்டு கல்லூரிகளாவது தமிழகத்தில் இருந்து தேர்வு செய்யப்படும். ஆராய்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு மருத்துவக் கல்லூரி மற்றும் செவிலியர் கல்லூரிகளில் ஆராய்ச்சிக்காக தனி துணை முதல்வர்களை நியமிக்க வேண்டும்.

இவ்வாறு சவுமியா சுவாமிநாதன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x