Published : 06 Sep 2017 09:30 AM
Last Updated : 06 Sep 2017 09:30 AM

பழனிசாமி அரசுக்கு தனியரசு ஆதரவு: தனித்து செயல்படுவதாக அன்சாரி அறிவிப்பு - எம்எல்ஏ கருணாஸ் நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை

அதிமுக ஆதரவு எம்எல்ஏக்களில், முதல்வர் பழனிசாமி அரசுக்கு ஆதரவளிப்பதாக தனியரசு தெரிவித்துள்ள நிலையில், தமிமுன் அன்சாரி ‘இனி யாருக்கும் ஆதரவில்லை, தனித்து செயல்பட உள்ளேன்’ எனக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் அதிமுக ஆதரவு கட்சிகளின் எம்எல்ஏக்கள் 3 பேரும் பங்கேற்கவில்லை. இருப்பினும், அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறும்போது, 3 பேரும் அரசுக்கு ஆதரவளிப்பதாக கூறியுள்ளனர் என்றார். ஆனால், தினகரனுக்கு அவர்கள் ஆதரவளிப்பதாக தங்க தமிழ்ச்செல்வன் எம்எல்ஏ தெரிவித்தார்.

இந்நிலையில், மனித நேய ஜனநாயக கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி கூறியதாவது: தமிழக முதல்வர் கூட்டத்துக்கு வருமாறு தொலைபேசியில் அழைத்தார். இதுதொடர்பாக கட்சியின் தலைமை நிர்வாகிகளிடம் ஆலோசித்தேன். இன்றைய அரசியல் சூழலை ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் கூட்டத்தில் கலந்து கொள்வதில்லை என்றும் முதல்வர் பழனிசாமி, தினகரன் என யாருக்கும் ஆதரவில்லை என்றும் முடிவெடுக்கப்பட்டது. நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசிடம் தமிழக அரசு ஏமாந்துவிட்டது. மாநில உரிமைகளை பழனிசாமி அரசு விட்டுக் கொடுத்ததில் எங்களுக்கு உடன்பாடில்லை. எனவே, தனித்தன்மையுடன் எங்கள் அரசியல் பயணத்தை தொடர விரும்புகிறோம் என்றார்.

கொங்கு இளைஞர் பேரவை எம்எல்ஏ தனியரசு கூறும்போது, ‘அரசுக்கு ஆதரவாகத்தான் இருக்கிறேன். ஆதரவை திரும்ப பெறவோ, ஒரு அணி சார்பான நிலைப்பாட்டையோ நான் எடுக்கவில்லை. அணிகள் ஒன்றுபடவேண்டும் என்று வலியுறுத்தினேன். முதல்வர், அமைச்சர்கள் கூட்டத்தில் இயன்றவரை பங்கேற்கிறேன் என்றேன். சில விஷயங்களை ஆழமாக விவாதிக்கும்போது நான் அங்கிருப்பது சரியாக இருக்காது. அதே நேரம் அரசுக்கான ஆதரவை திரும்ப பெற்று நெருக்கடியை வலிமைப்படுத்த விரும்பவில்லை. 19 அதிருப்தி எம்எல்ஏக்களுடன் பேசி அரசை நீடித்து கொண்டு செல்ல வலியுறுத்தினேன்’ என்றார். எம்எல்ஏ கருணாஸின் நிலைப்பாட்டை அறிய அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x