Published : 05 Sep 2017 09:47 AM
Last Updated : 05 Sep 2017 09:47 AM

இலவச செட்டாப் பாக்ஸ் அனைவருக்கும் வழங்க வேண்டும்: உங்கள் குரலில் வாசகர் கோரிக்கை

தமிழக அரசின் இலவச செட்டாப் பாக்ஸ், அனைவருக்கும் வழங்க வேண்டும் என்று வாசகர் ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து ‘தி இந்து’ உங்கள் குரல் சேவை வழியாக தொடர்புகொண்டு, வாசகர் ஒருவர் கூறியிருப்பதாவது:

‘‘அரசு செட்டாப் பாக்ஸ் அனைவருக்கும் விரைவில் வழங்கப்படும் என்கிறார்கள். ஆனால் எங்கள் பகுதி ஆபரேட்டர்களிடம் கேட்டால், நாங்கள் தொடர்ந்து தனியார் நிறுவனத்துடன் தான் இருக்கப் போகிறோம் என்கிறார்கள். இதனால் எங்களுக்கு அரசு வழங்கும் டிஜிட்டல் சேவைகள் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் எங்களுக்கும் அரசின் டிஜிட்டல் சேவைகள் மற்றும் செட்டாப் பாக்ஸ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

இது தொடர்பாக அரசு கேபிள் டிவி நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது:

அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் தற்போது அரசு கேபிள் இணைப்பை பெற்ற வாடிக்கையாளருக்கு மட்டுமே இலவச செட்டாப் பாக்ஸ் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி தற்போதுள்ள 75 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இலவச செட்டாப் பாக்ஸ் கிடைக்கும். புதிய வாடிக்கையாளர்களுக் கும் வழங்க வேண்டும் என்றால், அது தொடர்பாக அரசு கொள்கை முடிவை எடுத்து அறிவிக்க வேண்டும்.

தற்போது ஏற்கெனவே உள்ள வாடிக்கையாளர்களுக்கு இலவச செட்டாப் பாக்ஸ் வழங்குவதற்கே 4 மாதம் வரை ஆகலாம் என தெரிகிறது. அதன்பிறகே மற்றவர்களைப்பற்றி யோசிக்க முடியும்.

இது தவிர, ஒரு இடத்தில் தனியார் ஆபரேட்டர் இணைப்பு வழங்கியுள்ள நிலையில், அவரே அரசு கேபிளுக்கு மாற வேண்டும். அப்போதுதான் அரசு கேபிள் செட்டாப் பாக்ஸ் வழங்க முடியும். அரசே ஒரு இடத்தில் புதிய ஆபரேட்டரை புகுத்தினால் சட்டப்படி சிக்கல் ஏற்படும்.

சென்னை உட்பட சில பகுதிகளில் மட்டுமே இந்த பிரச்சினை உள்ளது. மற்ற பகுதிகளில் அரசு கேபிள் ஆபரேட்டர்கள் தான் உள்ளனர். அதனால் சிக்கல் இல்லை. அதேபோல், எஸ்.டி., செட்டாப் பாக்ஸ்சில் இருந்து ஹெச்.டி. பாக்ஸ்க்கு மாற வேண்டுமானால், ஹெச்.டி., பாக்ஸ் விலை அதிகம். அதை செலுத்தித்தான் மாற முடியும்.

இவ்வாறு அவர் தெரிவித் தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x