Published : 05 Sep 2017 08:38 AM
Last Updated : 05 Sep 2017 08:38 AM

இரு பெண்களை மணக்கும் திட்டத்தை கைவிட்டார்: பட்டதாரி பெண்ணை கரம்பிடித்தார் ஆடு மேய்க்கும் திருச்சுழி இளைஞர்

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே ஓர் இளைஞருக்கு இரு பெண்களை திருமண செய்ய முடிவு செய்யப்பட்டுள்ள தகவல் வாட்ஸ்அப்பில் பரவியதால் பரபரப்பான சூழ்நிலைக்கு இடையே ஒரு பெண்ணை மட்டும் மணந்தார்.

திருச்சுழி அடுத்த ம.வெள்ளையாபுரத்தைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி(31). ஆடு மேய்க்கும் இவர், பெற்றோர் இறந்துவிட்டதால் அக்கா கலைச்செல்வி வீட்டில் வளர்ந்து வந்தார். இவருக்கும், கலைச்செல்வி மகளான பி.காம். படித்து முடித்த ரேணுகாதேவி(21) என்பவரையும், மற்றொரு அக்கா அமுதவள்ளியின் மகளையும் ஒரே மேடையில் திருமணம் செய்ய பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டது. இதற்காக திருமண பத்திரிகை அச்சடிக்கப்பட்டு உறவினர்களுக்கும் வழங்கப்பட்டன.

இத்தகவல் சமூக வலைதளங்களில் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. அதையடுத்து, ஊர் பெரியவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி ராமமூர்த்திக்கு ரேணுகாதேவியை மட்டும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி ராமமூர்த்தி-ரேணுகாதேவி திருமணம் குடும்பத்தார், ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் நேற்று காலை நடைபெற்றது.

இத்திருமணத்தை சமூக நலத் துறை களப்பணியாளர்கள் கண்காணித்து மாவட்ட சமூக நலத் துறை அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர்.

பரபரப்பாக பேசப்பட்ட ராமமூர்த்தி திருமணத்தை பார்க்க அப்பகுதி கிராம மக்கள் ஏராளமானோர் திரண்டிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x