Published : 04 Sep 2017 10:18 AM
Last Updated : 04 Sep 2017 10:18 AM

முதல்வரை மாற்றும்வரை சட்டப்பேரவைக்கு செல்ல மாட்டோம்: எம்.எல்.ஏ தங்க தமிழ்ச்செல்வன் பேட்டி

 

முதல்வர் கூட்டும் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம். முதல்வரை மாற்றும்வரை சட்டப்பேரவைக்கு செல்ல மாட்டோம் என்று தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ தங்க தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று சென்னை அடையாறு இல்லத்தில் செய்தியாளர்களிடம் தங்க தமிழ்ச்செல்வன் கூறியதாவது:

''தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை குறையவில்லை. தற்போது தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது. சொகுசு விடுதியில் எம்.எல்.ஏக்கள் இல்லை என்று வெளியான செய்தி தவறானது. ஞாயிற்றுக்கிழமை சுபமுகூர்த்த நாள் என்பதால் 10 எம்.எல்.ஏக்கள் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சொந்த ஊருக்குச் சென்றனர்.

மாவட்டச் செயலாளர் கூட்டத்தை துணை பொதுச் செயலாளர்தான் கூட்ட வேண்டும். மாவட்டச் செயலாளர் கூட்டத்தை கூட்ட முதல்வருக்கு அதிகாரம் இல்லை.

முதல்வர் கூட்டும் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம். கொறடா நோட்டீஸ் அனுப்பிய பிறகு எம்.எல்.ஏக்கள் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தது ஏன்? முதல்வரை மாற்றும்வரை சட்டப்பேரவைக்கு செல்ல மாட்டோம். ஆளுநர் இரண்டு நாளில் அழைப்பார் என்று நம்புகிறோம். ஆளுநர் அழைக்காவிடில் 2 நாட்கள் கழித்து அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுப்போம்.

நீட் தேர்வில் விலக்கு பெற முடியாது என்ற பட்சத்தில், நீட் தேர்வில் கேட்கப்படும் கேள்விகளை மாநில பாடத்திட்டத்தில் இருந்து கேட்க வேண்டும். அனிதாவின் இறுதிச் சடங்கில் அதிமுக அம்மா அணியின் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கலந்துகொண்டார். ஆனால், முதல்வர், ஓபிஎஸ், அமைச்சர்கள் ஏன் கலந்துகொள்ளவில்லை?

திமுக கூட்டத்தில் பங்கேற்போம் என்று திவாகரன் கூறியது அவரது தனிப்பட்ட கருத்து'' என்றார் தங்க தமிழ்ச்செல்வன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x