Published : 03 Sep 2017 12:54 PM
Last Updated : 03 Sep 2017 12:54 PM

திமுக ஆலோசனைக் கூட்டத்தில் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்பா?- ஆம் என்ற திவாகரன்., திட்டவட்டமாக மறுத்த தினகரன்

திமுக ஏற்பாடு செய்துள்ள அனைத்துக் கட்சி கூட்டத்தில் தங்கள் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் கலந்து கொள்வார்கள் என திவாகரன் கூறிய நிலையில் அடுத்த சில நிமிடங்களிலேயே அதை டிடிவி தினகரன் மறுத்துள்ளார்.

நீட் தேர்வு விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க நாளை (செப்.4) சென்னை அறிவாலயத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் என மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ள நிலையில் இக்கூட்டத்தில் தங்கள் தரப்பு ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் கலந்து கொள்வார்கள் என சசிகலாவின் சகோதரர் திவாகரன் கூறியுள்ளார்.

புதுக்கோட்டையில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், "நீட் தேர்வு குறித்து நாளை திமுக அழைப்பு விடுத்துள்ள அனைத்து கட்சி கூட்டத்தில் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் பங்கேற்பார்கள். மக்கள் நலன் கருதி இந்த கூட்டத்தில் அவர்கள் பங்கேற்பார்கள். நீட் தேர்வு விவகாரம், அனிதா தற்கொலை குறித்த விவகாரத்தில் முதல்வர் பழனிசாமி, சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் பதவி விலக வேண்டும்" என்றார்.

தினகரன் மறுப்பு:

ஆனால், "திமுகவின் ஆலோசனை கூட்டத்தில் எனது ஆதரவாளர்கள் பங்கேற்க மாட்டார்கள். எனது ஆதரவாளர்கள் பங்கேற்பார்கள் என திவாகரன் கூறியது அவரது தனிப்பட்ட கருத்து" என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

ஏற்கெனவே எடப்பாடி, ஓபிஎஸ் அணி அவர்களுக்கு எதிராக தினகரன் அணி என்று இருக்கும் நிலையில். தற்போது ஒரே பிரச்சினை குறித்து தினகரன் ஒரு கருத்தும் திவாகரன் ஒரு கருத்தும் கூறியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x